‘இம்பேக்ட் பிளே ஃபெஸ்ட்’, சிங்கப்பூரில் சமூகப் பிரச்சினைகளை மேசை மற்றும் காணொளி விளையாட்டுகள் வாயிலாகக் காட்சிப்படுத்தும் முதல் விளையாட்டு விழா.
கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்ட இவ்விழா ஈசூனில் இருக்கும் சூ சி மனிதநேய இளையர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உள்ளூர் சமூக மேம்பாட்டு நிறுவனங்களான ‘ஹேப்பினஸ் இனிஷியேட்டிவ்’, ‘போல்ட் அட் வெர்க்’ இணைந்து நடத்திய இவ்விழாவில் சமூகப் பிரச்சினைகளைக் காட்சிப்படுத்தும் 35 விளையாட்டுகள் இடம்பெற்றன.
அட்டை, பலகை விளையாட்டுகள் மின்னிலக்க விளையாட்டுகள் போன்ற மேசை விளையாட்டுகள் இதில் அடங்கும். ஒரே நாளில் விளையாட்டுப் பொருள்களை விற்கும் விற்பனையாளர்கள் மொத்தம் 117 விளையாட்டுகளை இவ்விழாவில் விற்றனர்.
சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிய விளையாட்டுகள் ஒரு சிறந்த வழி என இவ்விழாவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஷெர்மன் ஹோ கூறினார்.
அவர், மன நலனில் கவனம் செலுத்தும் நிறுவனமான ‘ஹேப்பினஸ் இனிஷியேடிவ்’வின் இணை நிறுவனரும் ஆவார்.
“நீங்கள் ஒரு குழந்தையிடம் சென்று அதன் உணர்ச்சிகளைப் பற்றி பேசும்படி கூறினால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று அவர்களுக்குப் புரியாது,” என திரு ஹோ சொன்னார்.
“ஆனால் நீங்கள் ஒரு பலகை விளையாட்டை அவர்களுக்குமுன் வைத்து அவர்களை விளையாடச் சொன்னீர்கள் என்றால் நீங்கள் அவர்களுக்கு விதிகளைச் சொல்லாவிட்டாலும், எப்படி விளையாடுவது என்று அவர்கள் கண்டுபிடிப்பார்கள். ஒருவரை ஒரு செயலில் ஈடுபடுத்த இது மிகவும் சக்திவாய்ந்த வழி,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விழா 2021ல் தொடங்கப்பட்டது எனவும் அவ்வாண்டு $37.90 மதிப்புள்ள 2,000க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் விற்கப்பட்டன எனவும் அவர் எடுத்துரைத்தார்.
அந்தப் பொருள்களை வாங்கிய பெரும்பான்மையானவர்கள் கல்வியாளர்கள் என்றும் இவ்விளையாட்டுகள் பள்ளி அமைப்புகளுக்கும் ஆலோசனை அமர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் திரு ஹோ கூறினார்.