எண் 1, காக்கி புக்கிட் ரோட்டில் அமைந்துள்ளது ‘கறி & தந்தூர்’ உணவகம்.
உணவக வளாகத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாததால் டிசம்பர் 5 முதல் 18ஆம் தேதி வரை, அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த உணகவம், ஓர் ஆண்டிற்குள் 12 தண்டனைப் புள்ளிகளைப் பெற்றதாகக் கூறப்பட்டது.
தூய்மையின்மை, அசுத்தமான உணவை விற்பனை செய்தது ஆகியவை தொடர்பில் ‘கறி & தந்தூர்’ உணவகத்திற்கு $800 அபராதம் விதிக்கப்பட்டது.
ஹலால் சான்றிதழ் பெற்ற அந்த உணவகத்தில் உணவைக் கையாளும் ஊழியர்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படைப் பயிற்சியில் மீண்டும் கலந்துகொண்டு தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயம். அதன் பிறகே அவர்கள் வேலையை மீண்டும் தொடங்கலாம்.
உணவுச் சேவை வழங்குவோர், உணவுத் தூய்மையிலும் தனிநபர் தூய்மையிலும் எப்போதும் கவனம் செலுத்தவேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு நினைவுறுத்தியது.
சுற்றுச்சூழல் பொதுச் சுகாதார சட்டத்தை மீறியதாக உறுதிசெய்யப்பட்டோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று அது குறிப்பிட்டது.