சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் ஓடுபாதையில் இரவுநேரத்தில் வாரத்திற்கு இருமுறை 60 பேர் அடங்கிய குழுவும் 20 வாகனங்களும் பணியில் ஈடுபடுகின்றன.
விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் 4 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த ஓடுபாதை பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை உறுதிசெய்வதே நோக்கம்.
எத்தனை முறை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது, ஓடுபாதை எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துள்ளது. ஒரே ஓர் ஓடுபாதை மட்டுமே பராமரிப்புக்காக மூடியிருக்கும். அதனால் மற்றோர் ஓடுபாதை இன்னும் செயல்பாட்டில் இருக்கும்.
வழக்கமாக பணிகளை முடிப்பதற்கு அதிகாலை ஒரு மணி முதல் காலை ஐந்து மணிவரை பராமரிப்புக் குழுவுக்கு நேரம் கொடுக்கப்படும். ஓடுபாதையின் ஓரத்தில் இருக்கும் புற்களை வெட்டுவது, சாலைக் குழிகளை அடைப்பது, விமானத்திலிருந்து விழும் ரப்பர் துகள்களை அகற்றுவது போன்றவை அந்தப் பணிகளில் அடங்கும்.
பராமரிப்பு வாகனம் சென்ற சில நிமிடங்களில் திறக்கப்படும் ஓடுபாதையைப் பயன்படுத்த விமானங்கள் காத்திருக்கும்.
சென்ற ஆண்டின் முதல் 11 மாதங்களில் சாங்கி விமான நிலையம் 298,000 விமானப் பயணங்களைக் கையாண்டது. விமானங்கள் ஒன்றாம் அல்லது மூன்றாம் ஓடுபாதையைப் பயன்படுத்தின.
இரண்டாம் ஓடுபாதை சென்ற ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.