கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய விவகாரத்தில் தொடர்புடைய பத்துப் பேரில் ஒருவரான சு வென்சியாங், சீன அதிகாரிகளிடமிருந்து தப்பி சிங்கப்பூருக்கு வந்தவர் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வியாழக்கிழமை கூறினார்.
2021ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு சு வந்தார்.
கம்போடியாவைச் சேர்ந்த 31 வயதான சுவின் பிணை மனு மறுஆய்வின்போது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அவரது பிணை மனுவை நீதிபதி நிராகரித்தார்.
தம் மனைவி, பிள்ளைகளுடன் சு 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தார் எனவும் அவர் தம் பிள்ளைகளுக்கு உயர்தரக் கல்வி வழங்கவே சிங்கப்பூருக்கு தம் குடும்பத்துடன் வந்தார் என அவருடைய வழக்கறிஞர் பிணைக்காக வாதிட்டபோது கூறினார்.
“குற்றம் சாட்டப்பட்டவர், 2021ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த ஒரு வெளிநாட்டவர் மட்டுமன்று. அவர் சீன அதிகாரிகளிடமிருந்து தப்பி சிங்கப்பூருக்கு வந்தவர். அவருடைய பிள்ளைகள் சிங்கப்பூரில் படிப்பதால் அவர் வேறு நாட்டிற்குத் தப்பியோட மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,” என சுவின் பிணை மனுவை எதிர்த்து வாதிட்டபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
புக்கிட் தீமாவில் உள்ள குட் கிளாஸ் பங்களாவில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சு கைது செய்யப்பட்டார். அவர் இரண்டு பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அவரிடம் $601,706 பணம் இருந்ததாகவும் அப்பணம் மோசடியிலிருந்து பெறப்பட்ட பணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாலும் அவர்மீது மோசடி பணம் வைத்திருந்ததாக ஆகஸ்ட் 16ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
சட்டவிரோதமாக சூதாட்ட சேவையை வழங்கியதன் மூலம் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் $500,000 பணத்தைப் பயன்படுத்தி மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்கியதாகக் கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி அவர்மீது சுமத்தப்பட்டது.