கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்த 40,000க்கும் மேற்பட்டோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை அவர்களுக்குத் திருப்பி வழங்கப்படவுள்ளது.
கடந்த நவம்பர் 20 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையிலான 15 நாள் காலகட்டத்திற்கான மின்னியல் சாலைக் கட்டணத்தை (இஆர்பி) அச்செயலி தவறாகக் கணக்கிட்டதே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்குக் காரணம் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் பொதுப் போக்குவரத்து மன்றமும் டிசம்பர் 22ஆம் தேதி ஒரு கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.
இதனால், 60,787 பயணங்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதன் காரணமாக 40,431 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோரிடம் கூடுதல் இஆர்பி கட்டணமாக $1 முதல் $3 வரை வசூலிக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.
பள்ளி விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை பத்து இடங்களில் இஆர்பி கட்டணம் $1 குறைக்கப்படும் என்று சென்ற நவம்பர் 15ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.
கிராப் செயலி மூலமாக பயணங்களுக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் சிலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைத்ததாக அவ்விரு அரசாங்க அமைப்புகளும் கூறின.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பயணிகளைத் தனது செயலி மூலமாக கிராப் தொடர்புகொண்டதாகவும் அவர்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் கிராப் பே வாலட் மூலமாக திருப்பித் தரப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.