தனது ஓட்டுநர் ஒருவர் பயணிக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கிராப் டாக்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தமது பெயரைக் குறிப்பிடாத அந்தப் பயணி, டாக்சி ஓட்டுநருடன் நடந்த உரையாடல் குறித்த படங்களை இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) பகிர்ந்துகொண்டார்.
அருகில் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருந்த காரணத்தால் குறித்த இடத்திற்குச் சென்று பயணியை ஏற்க இயலவில்லை என்று டாக்சி ஓட்டுநர் பயணியிடம் தெரிவித்தபோது அவர்களுக்கு இடையில் தகராறு தொடங்கியதாகத் தெரிகிறது.
வர இயலவில்லை எனில் சேவையை ரத்து செய்யுமாறு பயணி சொல்ல, நீங்கள் இந்தியரா என்று ஓட்டுநர் கேட்க, பின்னர் “இந்தியாவுக்கு திரும்பிப் போங்கள்” என்று ஓட்டுநர் சொன்னதாகப் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தாம் சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளாகத் தங்கி வேலை செய்வதாகவும் இச்சம்பவம் ‘அப்பட்டமான இனவாதம்’ என்றும் அந்தப் பயணி குறிப்பிட்டு உள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வினவியபோது, நடந்தது பற்றி விசாரித்து வருவதாக கிராப் நிறுவனப் பேச்சாளர் கூறினார். பாரபட்சமான நடத்தை மற்றும் வார்த்தைளுக்கு எதிராக தமது நிறுவனம் கடுமையாக நடந்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.