காஸா போரால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரு நபர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை எகிப்தின் எல் அரிஷ் நகரத்திற்கு வியாழக்கிழமை அனுப்பியது.
சிங்கப்பூர் மனிதநேய அடிப்படையில் காஸாவிற்குச் செய்துவரும் உதவிகளுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் வெள்ளிக்கிழமை தனது ‘ஃபேஸ்புக்’ பதிவில் தெரிவித்தார்.
அவசரகால மருத்துவ நிபுணரான லெஃப்டினன்ட்- கர்னல் டாக்டர் நஜிருல் ஹன்னன் அப்துல் அஜீஸ், அறுவை சிகிச்சை செவிலியராக நிபுணத்துவம் பெற்ற மூன்றாம் நிலை ராணுவ நிபுணர் ஜிம்மி வூ யிங் மிங் ஆகிய இருவரும் அந்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் எல்-அரிஷ் துறைமுகத்தில் இருக்கும் பிரெஞ்சு ஆயுதப் படையின் மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவார்கள் எனத் தற்காப்பு அமைச்சு கூறியது.
காஸாவிற்குச் சிங்கப்பூர் மனிதநேய அடிப்படையில் செய்துவரும் அனைத்து உதவிகளுக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படைத் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.