ஆண்களைவிடப் பெண்களை ‘ஆக்டிவ் ஏஜிங்’ நிலையங்களுக்குச் செல்ல வைப்பது மிகவும் கடினம் என்கிறார் மூத்த தலைமுறைத் தூதரான திருவாட்டி ரசூல் பாத்திமா அகமது.
மூத்தோர் தலைமுறை தூதர்களின் தொண்டினை அங்கீகரிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் விருது பெற்ற 17 தொண்டூழியர்களில் ரசூலும் ஒருவர்.
தனக்கு ‘ஆக்டிவ் ஏஜிங்’ நிலையங்களில் சேர விரும்பவில்லை என்றும் அங்கு இருப்பவர்கள் என்னைப் பற்றி வீண் பேச்சு பேசுவார்கள் என்றும் வயது மூத்த பெண் ஒருவர் கூறியதாக முழுநேரத் தொண்டூழியரான ரசூல் தெரிவித்தார்.
நிலையத்தில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு அங்கு இருக்கும் தங்கள் நண்பர்களுடன் சில பெண்கள் சண்டையிடுவதைக்கூடத் தான் பார்த்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நிலையங்களுக்குச் செல்ல ஆண்கள் ஆர்வமாக உள்ளனர். அங்குத் தங்களுடன் இணைந்து காபி கடைக்குச் செல்ல விரும்பும் நண்பர்களைத் தேடி அவர்களுடன் நட்பு பாராட்ட அவர்கள் விரும்புகின்றனர்,” என அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஃபெர்ன்வேல், அங் மோ கியோ உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மூத்தோர்களை ‘ஆக்டிவ் ஏஜிங்’ நிலையங்களுக்குச் செல்ல 53 வயதான ரசூல் உதவி புரிகிறார். மேலும், அந்த நிலையங்களில் இருக்கும் மூத்தோர்களுக்குத் தேவையான உதவிகளையும் அவர் செய்து வருகிறார்.
ஒரு வாரத்திற்கு மூன்றிலிருந்து ஆறு முறை மூத்தோர்களின் உடல் நலன் பற்றியும் அவர்களின் மன நலன் குறித்தும் அறிய அவர்களின் இல்லக் கதவுகளை ரசூல் தட்டுகிறார்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு நிறுவனமான மூத்தோர் தலைமுறை அலுவலகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 தொண்டூழியர்கள் மூத்தோர்களின் நலனைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு இத்தொண்டூழியர்களின் எண்ணிக்கை 3,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்தோர்களுடன் நட்பு கொள்வதற்கான தன்னார்வ முயற்சிகளை அதிகரிக்க இவ்வாண்டு உயர்கல்வி நிலையங்களுடனும் பிற நிறுவனங்களுடனும் ‘ஆக்டிவ் ஏஜிங்’ நிலையம் கூட்டாண்மையைத் தொடங்கியது.
நடக்கச் சிரமப்படும் மற்றும் தங்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மூத்தோர்கள் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்நிலையத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் பணியாற்றுகிறார்கள்.