சட்டவிரோதமாக திருடப்பட்ட 1,064 மெட்ரிக் டன் எரிபொருளை ‘பிரைம் சினர்ஜி’ எனப்படும் எண்ணெய்க் கப்பலில் நிரப்பி, பின்னர் அதனை வேறு கப்பலுக்கு மாற்றிய குற்றத்திற்காக பான் சுவான் பின் என்ற ஆடவருக்கு வெள்ளிக்கிழமை ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் திருட்டு எண்ணெய்யின் மதிப்பு $663,500 எனக் கூறப்பட்டது.
வியட்னாமைச் சேர்ந்த 50 வயதான பான், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார்.
புலாவ் புக்கோமில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரைம் சினர்ஜி எண்ணெய்க் கப்பலில் திருட்டு எண்ணெய் நிரப்பப்பட்டது.
பின்னர் அந்தக் கப்பலைக் கடலுக்குள் ஓட்டிச்சென்ற பான், அந்தத் திருட்டு எண்ணெய்யை அதிலிருந்து வேறொரு சிறுகப்பலுக்கு மாற்றிவிட்டதாகவும் அதற்காக ஹோ சி மின் நகரை அடைந்ததும் அவருக்கு 4,000 அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.