முதலாளியின் 86 வயது தாயாரைப் பலமுறை குத்தி பணிப்பெண்ணுக்கு 13 மாதச் சிறை விதிக்கப்பட்டது. குத்தியதால் அம்மூதாட்டி கீழே விழுந்து அவரது தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டது.
பாதிக்கப்படக்கூடியவர் என்று தெரிந்தும் தாக்கிய ஒரு குற்றச்சாட்டை 32 வயதான ஓ வின் கி வெள்ளிக் கிழமை ஒப்புக்கொண்டார்.
அந்த மூதாட்டியின் கையைக் கடித்தது, உடற்பயிற்சி சாதனத்தைக் கொண்டு அவரது கையில் தாக்கிய குற்றச்சாட்டுகளும் தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
தாக்கப்பட்டவர் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் ஞாபகமறதி நோயால் அவதிப்படுவதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
2022 பிப்ரவரி மாதம் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதைப் பற்றி ஓ அறிந்திருந்தார்.
செங்காங் நகரில் உள்ள தனது முதலாளியின் இல்லத்தில் வசித்த ஓ, தனது தாயைப் பராமரிப்பதற்கும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் பணியமர்த்தப்பட்டார்.
அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், மூதாட்டி உடற்பயிற்சி செய்ய எழுந்து நிற்க வசதியாக ஓ அவரைப் படுக்கையின் விளிம்பில் உட்கார வைத்தார். ஆனால் அந்த மூதாட்டி தரையில் சரிந்தார்.
அவரை மீண்டும் படுக்கைக்கு இழுத்த ஓ, அவரது முகத்தின் இடது பக்கத்தில் நான்கு முறை குத்தினார். இதனால் மூதாட்டி கீழே விழுந்தார்.
அவரது நடவடிக்கைகள் வீட்டில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தன. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மூதாட்டியின் தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் பின்னர் காவல்துறையில் புகார் செய்தார்.