விலங்குவதைத் தடுப்புச் சங்கம் நன்கொடை கோரி அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாண்டு முழுதும் சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், தத்தெடுப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதாலும் 2023ல் கிறிஸ்துமசுக்கான நன்கொடை இலக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி உள்ளதாக சங்கம் விளக்கியுள்ளது.
இருப்பினும், இதுவரை மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவான தொகையே திரட்டப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.
நிதிதிரட்டு முயற்சியாக 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தனது கிறிஸ்துமஸ் விருப்பப் பட்டியலை நிறைவேற்ற டிசம்பர் 18ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், சங்கம் நன்கொடை கோரி அழைப்பு விடுத்தது.
விலங்குகளின் உணவு, செல்லப் பிராணிகளுக்கான ‘ஷாம்பூ’ உள்ளிட்ட பொருள்கள் விருப்பப் பட்டியலில் அடங்கும்.
டிசம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி, $121,691 நிதி திரட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். இருப்பினும், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் $386,752 திரட்ட அது முனைகிறது. இது, சென்ற ஆண்டின் இலக்கான $202,073ஐக் காட்டிலும் அதிகம்.
அதிகரித்துள்ள அவசரத் தேவைகளே இதற்குக் காரணம் என்றார் திருவாட்டி ஆர்த்தி.
விருப்பப் பட்டியலில் உள்ள பொருள்களால், விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் பராமரிப்பில் உள்ள விலங்குகளும், கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் உட்பட சமூகத்தில் உள்ள விலங்குகளும் பயன்பெறும் என்று அவர் சொன்னார்.
ஒவ்வோர் ஆண்டும் விலங்குவதைத் தடுப்புச் சங்கம் 4,000க்கும் அதிகமான விலங்குகளுக்கு உதவி வருகிறது.