முன்னாள் தேசிய காற்பந்து வீரரான 59 வயது கே. கண்ணன் (படம்) தனக்கு எதிராக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை மீட்டுக்கொள்ளுமாறு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் மேல் முறையீடு செய்துள்ளார்.
காற்பந்து தொடர்பான மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் திரு கண்ணனுக்கு, 1995ல் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
எவ்வித காற்பந்து நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள திரு கண்ணன், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) தனக்காக வாதிடும் யூஜின் துரைசிங்கம் சட்ட நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் மேல்முறையீட்டு மனு வைச் சமர்ப்பித்தார்.
இது திரு கண்ணன் செய்திருக்கும் ஐந்தாவது மேல்முறையீடு. 1999லும் 2002லும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பு ஆகியவற்றிடம் சமர்ப்பித்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.
"என்னை நினைவில் வைத்திருப்பவர்களும் என் மேல் அக்கறை கொண்டவர்களும் இன்னும் இருப்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி யடைகிறேன்.
"எனக்கு சற்று வயதாகி விட்டது. நான் காற்பந்து விளையாடிய காலங்கள் முடிந்துவிட்டன. நான் செய்த தவற்றுக்கு மிகப் பெரிய தண்டனை பெற்று விட்டேன். நான் என் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன்," என்று திரு கண்ணன் கூறினார்.
திரு கண்ணன், தமது நண்பர்களுடன் பொழுதுபோக்குக்காக காற்பந்து விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கண்ணனுக்கு அவரது தடையை நினைவுப்படுத்தும் கடிதத்தை அனுப்பியிருந் தது.
அதன் தொடர்பில் முன்னாள் செய்தியாளரும் முன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான திரு ஜோசே ரேமண்ட், ஒரு சட்டக் குழுவை ஒன்றுதிரட்டி, சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் கண்ணன் சார்பில் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க காரணமாக இருந்தார்.
திரு கண்ணனுக்கு எதிரான தடை மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் இளம் காற்பந்தாட்டக்காரர்களுக்கு விளையாட்டுத் திறனை கற்றுக்கொடுக்க அவர் ஆவலாக உள்ளார் என்றும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் அனுப்பப்பட்ட மேல்முறையீட்டுக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.