இணையத்தில் ஒளிபரப்பு செய்ய உதவும் கருவிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள், 13 பேர் ஆண்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதிற்கும் 61 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். இவர்கள் விற்பனை செய்த கருவிகளின் மதிப்பு ஏறக்குறைய 500,000 வெள்ளி.
சென்ற செவ்வாய்க்கிழமை, குற்றவியல் விசாரணைத் துறை அதிகாரிகள் சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியின் சில சில்லறை விற்பனைக் கடைகளில் சோதனைநடத்தினர். இதில் 2.500க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய ஒளிபரப்புக் கருவிகள் பிடிபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்தக் கருவிகள் மூலம் பயனாளர்கள் இணையத்தில் சட்டவிரோதத் தகவல்களைப் பார்க்க இயலும்.
பதிப்புரிமை பெற்ற தகவல்களைச் சட்டவிரோதமாக நகல் எடுத்தல், கையாளுதல், தரவிறக்கம் செய்தல், விநியோகித்தல், இதற்கான கருவிகளை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு $100,000 வரையிலான அபராதமோ ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.