சிங்கப்பூரில் இந்த ஆண்டின் எஃப்1 இரவுநேரக் கார்ப் பந்தயம் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
அதை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி முதல், ஒரு வாரத்திற்கு மரினா சென்டரிலும் பாடாங்கிலும் சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும். பெருவிரைவு ரயில்கள் கூடுதல் நேரத்திற்குச் சேவை வழங்கும்.
குறிப்பிட்ட சில பேருந்துகள் சேவை வழங்கும் பாதை மாற்றி அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இரவுநேரக் கார்ப் பந்தயத்தால் குறைவான அளவிலேயே போக்குவரத்துக்கு இடையூறு நேர்வதை உறுதிசெய்யவும் பந்தயம் முடிந்த பிறகு கட்டங்கட்டமாக சாலைகளை மீண்டும் போக்குவரத்திற்குத் திறந்துவிடவும் ஏற்பாட்டாளர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
கூடுதல் விவரங்களுக்கு ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம்.
செப்டம்பர் 13 முதல் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பொதுமக்களும் பந்தயத்தைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருப்போரும் மரினா சென்டர், பாடாங் வட்டாரங்களுக்குப் பொதுப் போக்குவரத்தில் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
போக்குவரத்து சுமுகமாக இருப்பதை உறுதிசெய்ய, போக்குவரத்துக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பர்.
பந்தயம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனமோட்டிகளுக்கு உதவும் வகையில் வழிகாட்டிக் குறியீடுகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த வட்டாரத்திற்குச் செல்வோர் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட, https://go.gov.sg/f1 எனும் இணையத்தளத்தில் உள்ள வழிகாட்டிக் குறிப்பேட்டை நாடலாம்.