முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் திரு தர்மனுக்கு 70.4 விழுக்காடு வாக்குகள் கிட்டின.
திரு தர்மனை எதிர்த்துப் போட்டியிட்ட திரு இங் கொக் சொங்கிற்கு 15.72 விழுக்காடு வாக்குகளும் திரு டான் கின் லியானுக்கு 13.88 விழுக்காடு வாக்குகளும் கிட்டின.
முடிவுகள் கிட்டத்தட்ட இரவு 12.30 மணியளவில் வெளிவந்தன.
மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான்பின் தாமான் ஜூரோங் சந்தையில் ஊடகத்தினரிடம் பேசிய திரு தர்மன், சிங்கப்பூர் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்குத் தலைவணங்குவதாகக் கூறினார்.
நடப்பு விவகாரங்களை அணுக்கமாகப் பின்தொடர்ந்து, அதிபர் தேர்தல் காலகட்டத்தின்போது அமைதியுடன் ஈடுபாடு காட்டியதற்காக சிங்கப்பூரர்களுக்கு திரு தர்மன் நன்றி கூறினார்.
போட்டியில் தங்களது முழு முயற்சியையும் ஆற்றலையும் செலுத்தி மதிப்புமிக்க போட்டியாக்கியதற்காக சக வேட்பாளர்களுக்கும் திரு தர்மன் நன்றி கூறினார்.
தோல்வியைத் தழுவி, வாழ்த்திய எதிராளிகள்
மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்த சிறிது நேரத்தில், திரு இங் தேர்தலில் தம் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
திரு தர்மன் தொலைபேசி வழியாக தம்மைப் பாராட்டி, துடிப்பான பிரசாரத்தைத் தந்திருந்த தமது குழுவிற்கும் நன்றி தெரிவித்ததாக திரு இங் கூறினார். பெரும் வெற்றி அடைந்த திரு தர்மனைத் தாமும் வாழ்த்தியதாக அவர் சொன்னார்.
தேர்தல் முடிவு குறித்து திரு தர்மனை வாழ்த்தியதாகக் கூறிய திரு டான், தேர்தலில் தாம் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாக எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார். ஆனாலும், தேர்தல் என்று வரும்போது நிச்சயமின்மை இருக்கும் என்று நினைப்பதாக அவர் மேலும் சொன்னார்.
இந்நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி திரு தர்மன் அதிபராகப் பதவியேற்பார் என்று எனப் பிரதமர் லீ சியன் லூங் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.