குழந்தைகள் மனதில் நினைப்பதை துணிச்சலுடன் வெளியில் சொல்லப் பழகுவதற்கு ‘கதை சொல்லல்’ ஒரு சிறந்த வழி. அதிலும் குறிப்பாக தமிழரின் பாரம்பரிய வில்லுப்பாட்டுப் பாணியில் குழந்தைகள் கதை சொல்வதைப் பார்ப்பதே தனி அழகுதான் என்கிறார் ஏகேடி நிறுவனத் தலைவர் திருவாட்டி ராணி கண்ணா.
இளையர் விழா 2023ன் ஒரு பகுதியாக, ஏகேடி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான வில்லுப்பாட்டுப் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி உட்லண்ட்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. போட்டிக்கான அறிவிப்பு வந்தவுடன் பல மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வம் தெரிவித்திருந்த நிலையில், அவர்களின் கதைகளைக் கேட்டு, அவற்றில் சிறந்த கதைகள் தேர்வாகின. தொடர்ந்து, அந்தக் கதைகளை மெருகேற்றும் வகையில் வில்லுப்பாட்டு பாணியில் பாடல்கள், இசை கற்றுத்தரும் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
பல கட்டப் பயிற்சிக்குப் பின்னர், ஆறு குழுக்கள் மேடையேற்றப்பட்டு, அதில் சிறந்த மூன்று குழுக்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. குழுவாக இல்லாமல் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், தனிநபராக கதை சொல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் அளிக்கப்பட்டன.
தயாரிப்பாளரான திருவாட்டி மஞ்சுளா பாலகிருஷ்ணன், இயக்குநர், எழுத்தாளர் திருவாட்டி ஜெயா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடுவராக இருந்து முடிவுகளை அறிவித்தனர்.
செயின்ட் ஆண்டனி தொடக்கப்பள்ளி மாணவர்கள் 6 பேர் கொண்ட குழு முதற்பரிசைத் தட்டிச் சென்றது. சற்று தடுமாறினாலும் தளராமல் மீண்டெழுந்து சிறப்பாக கதை சொல்லி இரண்டாம் பரிசுபெற்ற வெலிங்டன் தொடக்கப்பள்ளி மாணவர் குழுவுக்கு, ‘ஆனந்த கண்ணன்’ நினைவு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
செயின்ட் ஆண்டனி தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருவாட்டி சாந்தா சுப்பையா, 62, “கதை என்பதே மாணவர்களை உற்சாகமூட்டும். இந்தப் போட்டியின் வாயிலாக சரியான தமிழ் உச்சரிப்பு செய்யாத மாணவர்களும் அதனைக் கற்றுக்கொண்டு சரிசெய்து பங்குபெற இது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
போட்டியில் பங்கேற்ற செம்பவாங் தொடக்கப்பள்ளி மாணவி நந்திதா நடராஜன், “வில்லுப்பாட்டு என்றால் என்னவென்று தெரிந்துகொண்டேன். இதற்காக பல பாடல்கள் கற்று, பாடியதும் விளையாட்டுத் திடலில் ஒன்றாக இணைந்து பயிற்சி செய்ததும் மகிழ்வாக இருந்தது,” என்றார். சீடார் உயர்நிலைப் பள்ளியின் உயர்நிலை 3 மாணவி கவின்நிலா, “வீட்டுப் பாடம் தவிர நேரடியாக தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பற்றி தெரிந்துகொள்ள இது உதவியது,” எனத் தெரிவித்தார்.