திருவாட்டி ஜெனில் ஹோடென், 46, என்ற மாது தன்னுடைய ஒன்பது வயது புதல்வியுடன் பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12ல் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு டாடா வாடகைக் காரில் சனிக்கிழமை சென்றார்.
அப்போது அந்தக் கார் ஓட்டுநர் அந்த மாதுக்கு எதிராக இன ரீதியில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் திருவாட்டி ஹோடென் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பல விவரங்களைத் தெரிவித்தார்.
உறவினர் புதிதாக குடியேறி இருந்தார் என்பதால் சில பைகளைத் திருவாட்டி ஹோடென் எடுத்துச் சென்றார்.
காரில் ஏறியபோது அந்த மாதின் பைகளைக் காரின் பின்புறத்தில் வைக்க உதவுவதற்காக ஓட்டுநர் வாகனத்தைவிட்டு வெளியே வந்தார். ஆனால், அதை அந்த மாது மறுத்துவிட்டார்.
வழியில் எம்ஆர்டி வேலை காரணமாக சாலையின் ஒரு பகுதி அடைபட்டு இருந்ததால் ஓட்டுநர் திடீரென மனமுடைந்துபோய்விட்டார்
அவர் அந்த மாதைப் பார்த்து தவறான முகவரியை தவறான திசையைக் காட்டிவிட்டதாகக் கூறினார்.
நீங்கள் ஓர் இந்தியர், நீங்கள் முட்டாள் என்று அந்த ஓட்டுநர் அந்த மாதைத் திட்டினார்.
அந்த நேரத்தில் அந்த மாது கைப்பேசியை எடுத்து உரையாடலைப் பதியத் தொடங்கினார்.
அந்தக் காணொளி அந்த மாதின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. அதோடு, ரிலி26746 என்ற டிக்டாக் பயனீட்டாளர் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டு பிறகு வேக் அப் சிங்கப்பூர் என்ற செய்தித்தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
திருவாட்டி ஹோடெனின் புதல்வி 1.35 மீட்டர் உயரம் கூட இல்லை என்று கார் ஓட்டுநர் கூறுவது அந்தக் காணொளியில் தெரிந்தது.
அதற்குப் பதிலாக அந்த மாது தன்னுடைய புதல்வி 1.37 மீட்டர் உயரத்துடன் கூடியவர் என்று பதில் கூறினார்.
தன்னுடைய கணவர் கிராப் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக வேலை பார்க்கிறார் என்றும் அதனால் தனியார் வாடகை வாகனங்களில் பயணிகளுக்கான உயர கட்டுப்பாடு பற்றி தனக்கு நன்கு தெரியும் என்றும் அந்த மாது ஓட்டுநரிடம் தெரிவித்தார்.
பயணம் தொடர்ந்த நிலையில் அந்த டாடா வாடகைக் காரை ஓட்டிச் சென்ற சீனர், அந்த மாதிடம் ரொம்பவும் பீற்றிக்கொள்ள வேண்டாம் என்றார்.
அதற்கு மண்டரின் மொழியில் பதிலளித்த அந்த மாது, நான் பெருமைப் பேசிக்கொள்பவர் அல்ல என்றார்.
பிறகு அந்த ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியபடியே, நீங்கள் இந்தியர், நான் சீனர். நீங்கள் மிகவும் மோசமானவர் என்றார்.
அதற்குப் பதிலளித்த அந்த மாது தான் இந்தியர் அல்ல என்றும் சிங்கப்பூர் யுரேஷியர் என்றும் கூறினார்.
அந்த மாது இரண்டாவது காணொளி ஒன்றையும் பதிவேற்றினார்.
ஒரு புளோக்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து ஓட்டுநர் வெளியே வந்ததை இரண்டாவது காணொளி காட்டியது. அப்போது அதைப் படம் பிடிக்கும்படி தன்னுடைய புதல்வியிடம் அந்த மாது கூறியது கேட்டது.
இதுவரை வாயால் திட்டிய ஓட்டுநர் தாக்கிவிடக்கூடும் என்ற பயத்தால் அந்த மாது தன்னுடைய புதல்வியை படம் பிடிக்கும்படி கூறினார்.
காரில் இருந்து பைகளை எடுக்கும்படி அந்த மாதை நோக்கி தன்னுடைய கைப்பேசியைப் பிடித்தபடி ஓட்டுநர் கூறியது காணொளியில் தெரிந்தது.
பிறகு அவர் தன் கைப்பேசியை சிறுமியை நோக்கி நீட்டினார். அப்போது சிறுமி விலகிச் சென்றுவிட்டார்.
அந்த மாதையும் அவருடைய புதல்வியையும் ஓட்டுநர் படம் எடுத்த நிலையில், அந்த மாது தவறான தகவல்களைத் தெரிவித்துவிட்டதாக ஓட்டுநர் திரும்பத் திரும்ப கூறினார்.
இதன் தொடர்பில் திருவாட்டி ஹோடென் டாடா நிறுவனத்துடன் தொடர்புகொண்டார்.
இது பற்றி புலன்விசாரணை நடத்தி வருவதாக டாடா சிங்கப்பூர் கூறியது.