சிங்கப்பூரின் பழம்பெரும் இந்திய சைவ உணவகங்களில் ஒன்றான கோமள விலாஸ், சிராங்கூன் சாலையில் மற்றொரு கிளையை நவம்பர் 1ஆம் தேதி திறக்கவுள்ளது.
முஸ்தஃபா செண்டர் அருகே எண் 291 சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள புதிய கிளை, பிரதான கிளையிலிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ளது.
கடந்த 2020ல் திறக்கப்பட்ட உணவகத்தின் மற்றொரு கிளையான ‘ஃபென்னல்’, ரிவர் வேலி ரோட்டில் இயங்குகிறது.
புதிய கிளையின் தோற்றம், அங்கு விற்கப்படும் உணவு வகைகள், அவற்றின் விலை ஆகியவை சிராங்கூன் ரோட்டிலுள்ள பிரதான கிளையைப் போன்றே இருக்கும் என்று உணவகத்தின் உரிமையாளர் 37 வயது ராஜகுமார் குணசேகரன் தெரிவித்தார்.
எண் 291 சிராங்கூன் சாலையில் இதற்கு முன்னதாக ‘எடிஎன் ஸ்பைஸ்’ உணவகம் செயல்பட்டது. வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்தப் புதிய ஒரு மாடி கோமள விலாஸ் உணவகத்தில் ஒரே நேரத்தில் 60 வாடிக்கையாளர்கள் வரை அமர்ந்து உணவருந்தலாம். ஓவன் ஹோட்டல், ஃபேரர் ஹோட்டல் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்கள் புதிய உணவகம் அருகே உள்ளன.
அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய கிளையைத் திறக்க முடிவெடுத்ததாக திரு ராஜகுமார் கூறினார்.
பஃப்ளோ சாலையில் இயங்கி வந்த உணவகத்தை கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டமான 2020 டிசம்பரில் மூடும் நிலை ஏற்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
“கிளையை மூடவேண்டிய நிலை வருத்தம் தந்தது. ஆயினும், நிலவரம் மேம்படும்போது புதிய கிளையைத் திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார் திரு ராஜகுமார்.
திரு ராஜகுமாரின் தாத்தா அமரர் ஓஎம் ராஜூ கோமள விலாஸ் உணவகத்தை 1947ல் நிறுவினார். 2005ஆம் ஆண்டு அவர் காலமானதை அடுத்து உணவகத்தை அவரது மகன் அமரர் ராஜூ குணசேகரன் நடத்தினார். அவரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ராஜகுமார் 2020ல் உணவகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
கடந்த 2015ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் வந்தபோது பிரதமர் லீ சியன் லூங் அவரை கோமள விலாஸ் உணவகத்துக்கு அழைத்துச் சென்ற நிகழ்வு, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கும் திரு ராஜகுமார், கோமள விலாசின் வருங்காலம் குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார்.