பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் சோதித்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட முறை நடப்புக்கு வந்தால், சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாகப் புறப்படும் பயணிகளுக்கான பாதுகாப்புப் பரிசோதனை நேரத்தில் 50 விழுக்காடு மிச்சப்படும்.
கையிலுள்ள பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் தானியக்க முறை தற்போது சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் சோதிக்கப்பட்டு வருகிறது.
தடைசெய்யப்பட்ட பொருள்களைத் தானாகக் கண்டறியும் முறை (ஏபிட்ஸ்) என்பது அந்தப் புதிய முறையின் பெயர்.
இதற்காக, விமானத்திற்குள் ஏறும் வாயில் அருகே செயற்கை நுண்ணறிவு முறையும் ஊடுகதிர் (எக்ஸ் ரே) இயந்திரம் எடுத்த படத்தைப் பரிசோதித்து தகவலாகத் தரும் இயந்திரமும் நிறுவப்பட்டு உள்ளன.
இந்தப் புதிய முறை, படத்தைப் பார்த்து என்ன பொருள் என்று ஆராய்வதற்கான நேரத்தையும் மனிதத் தவறுகள் நிகழ்வதற்கான சாத்தியங்களையும் குறைக்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்து உள்ளது.
ஆரம்பக்கட்ட சோதனை வெற்றியடைந்து உள்ளதாகக் குழுமம் குறிப்பிட்டு உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியக்க முறை மனிதர்களின் பரிசோதனைச் செயல்பாடுகளைவிட நன்றாக நடைபெற்றதாகவும் அது கூறியது.
கைப்பெட்டியில் தடை செய்யப்பட்ட பொருள்களை அது சிறப்பாகக் கண்டறிவதாகக் குறிப்பிட்ட அது, சோதனை தொடர்பான கூடுதல் தகவல்களை, பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட மறுத்தது.
விமானப் பயணிகளுக்கான கைப்பெட்டி மற்றும் கைப்பைகளில் பூச்சிக்கொல்லி மருந்து, சிகரெட் பற்றவைப்பான், கத்தி போன்ற கூர்மையான பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
மனிதர்கள் பரிசோதிப்பதைவிட ஐந்து மடங்கு வேகமாக இந்தப் புதிய முறை பரிசோதிப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதேபோன்ற முறையை அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து போன்ற நாடுகளும் சோதித்து வருவதாக ஏர்போர்ட் வேர்ல்ட் என்னும் சஞ்சிகை தெரிவித்து உள்ளது.
பரிசோதனை முடிவுகளைக் காட்டும் இரட்டைப் பரிமாணம் மற்றும் முப்பரிமாணப் படங்களுக்கு ‘ஏபிட்ஸ்’ என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது.
“விமானப் பயணங்கள் மீட்சி கண்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் கைப்பெட்டிகள் மற்றும் கைப்பைகளில் இருக்கும் பொருள்களின் அளவு அதிகரிக்கும் நிலையிலும் ‘ஏபிட்ஸ்’ முறையிலான சோதனை அவசியம். தவறான எச்சரிக்கை ஒலி எழுப்புவதை இது குறைக்கும்,” என்றது குழுமம்.
கடந்த செப்டம்பர் மாதம் சாங்கி விமான நிலையத்தை 4.87 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர். இது, கொவிட்-19க்கு முந்திய 2019ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் 89 விழுக்காடு.