சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு முதல் வித்தியாசமான கம்பிவண்டிகள் செயல்படுத்தப்படவுள்ளன.
சிங்கப்பூரில் கம்பிவண்டிச் சேவையின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம் புதிய கம்பிவண்டிகள் வெளியிடப்பட்டன.
இவை தற்போது செயல்பாட்டில் இருக்கும் கம்பிவண்டிகளைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான வடிவில் அமைந்துள்ளன. உருண்டையாக இருக்கும் இவற்றின் இரு பக்கங்களிலும் உள்ள கதவுகளின்வழி பயணிகள் ஏறி இறங்கலாம்.
வண்டியின் முன்னால் அமைந்திருக்கும் சன்னல்வழி வெளியே பார்க்கலாம். வண்டிக்குக்கீழ் வெளியே பார்க்கவும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.
இரவில் இவற்றைச் சுற்றி வண்ண விளக்குகள் ஜொலிக்கும். அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு விளக்குகள் எரியும்.
உதாரணமாக, தேசிய தினக் காலகட்டத்தில் சிவப்பு நிறத்தில் விளக்குகள் எரியும்.
அடுத்த தலைமுறைக்கான இந்தப் புதிய கம்பிவண்டிகள் உலகளவில் உருண்டை வடிவில் இருக்கும் முதல் கம்பிவண்டிகள் என்று சிங்கப்பூர் கம்பிவண்டி அமைப்பை (சிங்கப்பூர் கேபல் கார்) நடத்தும் மவுண்ட் ஃபேபர் லெஷர் குரூப் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புஹ்தி பொக் கூறினார். இந்தக் கம்பிவண்டிகளை உருவாக்க ஐந்தாண்டு காலம் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 1974ஆம் ஆண்டு கம்பிவண்டிச் சேவை தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து 60 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கம்பிவண்டிகளில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.