வாழ்வதற்கு துணை புரியும் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் முக்கிய கட்டுமான ஒப்பந்ததாரரின் சேவையை கழகம் ரத்து செய்துள்ளது.
புக்கிட் பாத்தோக் குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஹார்மனி வில்லேஜ் என்னும் 15 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் 169 சமூக பராமரிப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
கட்டுமான திட்ட ஆரம்பத்தில் இந்த புளோக் 2024ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் கட்டி முடிக்கப்படுவதாக இருந்தது. தற்பொழுது இது நிறைவுபெறும் காலம் செப்டம்பர், அக்டோபடர் மாதத்துக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.
இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த கழகம், தற்பொழுது இதன் கட்டுமானப் பணிகள் 2023 பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து முக்கிய கட்டுமான ஒப்பந்தாரரான ஜேஎஸ்எம் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்திடமிருந்து சிங்ஜியான் இன்டர்நேஷனல் (சவுத் பசிபிக்) குழும மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் திருப்தி தரும் நிலையில் இல்லாததால் ஜேஎஸ்எம் நிறுவனத்தின் சேவைக்கு 2023 ஜனவரி 9ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கழகம் விளக்கியது.
கட்டுமானத்தை மேற்கொள்ளும் நிறுவனம் மாற்றப்பட்டாலும் கட்டுமானத்தை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் எனத் தான் தொடக்கத்தில் மதிப்பிட்டதாகவும் கழகம் கூறியது.
அதன்படி, அதிக இயந்திரங்களைப் பயன்படுத்துவது, கூடுதல் துணைக் கட்டுமான ஒப்பந்ததாரர்களை நியமிப்பது, அதிக சத்தமில்லாத பூசி மெழுகும் பணிகள், சாயம் பூசும் பணிகள் போன்றவற்றை வேலை நேரங்களைத் தாண்டிச் செய்வது போன்ற, கட்டுமானத்தை விரைந்து முடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கழகம் தெளிவுபடுத்தியது.
“இதன் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டு வீடுகளின் கட்டுமானம் மேம்பட்ட நிலையை அடைந்துள்ளது. எனினும், கட்டுமான காலத்துக்கு ஏற்பட்ட இழப்பை திட்டமிட்டபடி ஈடுசெய்ய முடியவில்லை. அத்துடன், கட்டுமானத் தளத்தில் மற்ற இடையூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது,” என்றும் கழகம் தெரிவித்தது.
இந்த வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத் தளம் குடியிருப்புப் பகுதியில் இருப்பதால், இரைச்சலான கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிப்பட்ட நேரம் குறைவாக இருந்ததாகவும் கழகம் கூறியது. கட்டுமானம் தாமதமடைவது குறித்து நவம்பர் 8ஆம் தேதி வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.