வடகிழக்கு பருவமழைக் காலம் டிசம்பர் மாத முற்பாதியில் தொடங்கி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும்.
இந்தப் பருவத்தில் கடலில் பயணம் செய்வோர் அல்லது பொழுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பருவமழைக் காலத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமானதிலிருந்து கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் அலைமோதும் கடல், பலமாக மேலெழும்பும் கடல் அலைகள் ஆகியவை கடல் நடவடிக்கைகளை அபாயம் நிறைந்ததாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் கடற்பகுதியில் பார்க்கும் தொலைவு குறைவாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சொகுசுக் கப்பல்கள், படகுகளில் பயணங்கள் மேற்கொள்வோர் அவற்றில் ஏறும்போது படகு, கப்பலில் உள்ள கைப்பிடிகளைப் பயன்படுத்துதல், பயணத்தின்போது அமர்ந்திருத்தல் போன்ற பாதுகாப்புப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் அறிவுறுத்துகிறது.
மேலும், கப்பல், படகுகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் உயிர்காப்பு ஆடைகளை அணிந்து, படிகளைப் பார்த்து, கவனமுடன் கால்களை வைக்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு நினைவூட்டப்படுகிறது.
கடலில் படகோட்டுவோர், கடல் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், தனிநபர் மிதவைச் சாதனங்களை அணிவதுடன் அவை பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.