புதிதாக ராணுவ அதிகாரியாக உறுதி செய்யப்பட்டுள்ள கிரித்திக் கோபாலகிருஷ்ணன், 19, தம் தேசிய சேவையின் அடுத்த கட்டமான ராணுவ வேவுப் பணிக்குத் தயாராகி வருகிறார்.
என்யுஎஸ் கணித, அறிவியல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் கிரித்திக், தமது தேசிய சேவையை 2023 ஜனவரியில் தொடங்கினார். அடிப்படை ராணுவப் பயிற்சியை மூன்று மாதங்கள் நிறைவேற்றியபின் இவர் பயிற்சி அதிகாரிப் பள்ளியில் சுமார் ஒன்பது மாதங்கள் பயிற்சி பெற்றார்.
இவருடன் மொத்தம் 460 பயிற்சி அதிகாரிகள் சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில், அதிகாரிகளுக்கான ஆணை வழங்கும் அணிவகுப்பில் ராணுவ அதிகாரிகளாக சனிக்கிழமை
(டிசம்பர் 9) உறுதி செய்யப்பட்டனர்.
அணிவகுப்பைச் சிறப்பித்த அதிபர் தர்மன் சண்முகரத்னம், சட்டம், ஒழுங்கு நிலையாக உள்ள உலகைப் பேணுவதில் சிங்கப்பூர் ஆழமான கடப்பாடு கொண்டிருப்பதாகத் தமது உரையில் கூறினார்.
“இன்று நாம் எதிர்நோக்கும் பாதுகாப்புச் சவால்கள் சிக்கலானவை. தற்காப்பு நல்லுறவுகளையும் கூட்டு முயற்சிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல்களைத் தீர்க்க முடியும்,” என்று அவர் கூறினார்.
உடல் உறுதி, சண்டையிடுதலுக்கான பயிற்சிகளுடன் புலனாய்வுக்கான தொழில்நுட்பத் திறன்களையும் கிரித்திக் கற்றுள்ளார். “காடுகளில் நானும் என் நண்பர்களும் பயிற்சி மேற்கொண்டோம். சவால்களை ஒற்றுமையுடன் சமாளித்தோம்,” என்று அவர் கூறினார்.
தேசிய சேவையை முடித்த பிறகு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயிலவிருக்கிறார் கிரித்திக். ராணுவ அதிகாரியாக உறுதி செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறும் கிரித்திக், அதே நேரத்தில் தமக்குக் கொடுக்கப்பட்ட பணி பிற சேவையாளரின் நலனுக்கான பொறுப்பு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளார்.