பணம் கொடுத்தால் சுகாதாரப் பராமரிப்பு விருது கிடைக்கும் என்று நிறுவனம் ஒன்று தங்களை அணுகியிருப்பதாக உள்ளூர் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
$9,800 தந்தால் இவ்வாண்டுக்கான சிறந்த இரப்பைக் குடல் மருத்துவர் விருது கொடுக்கப்படும் என்று குளோபல் ஹெல்த் ஏஷியா பசிபிக் நிறுவனம் தம்மை 2020ஆம் ஆண்டில் முதல்முறையாக அணுகியதாக மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இரப்பைக் குடல் மருத்துவராக இருக்கும் 54 வயது டாக்டர் டெஸ்மண்ட் வாய் கூறினார்.
விருதுடன் அந்த நிறுவனத்தின் சஞ்சிகையிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகச் சிறந்த மருத்துவ நிலையம், மருந்தகங்கள் பட்டியலில் தமது பெயர் குறிப்பிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்ததாக டாக்டர் வாய் கூறினார்.
நிறுவனத்தின் முன்வைத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்தார்.
2022ஆம் ஆண்டிலும் இவ்வாண்டிலும் அந்த நிறுவனம் மீண்டும் தம்மை அணுகியதாக அவர் தெரிவித்தார். இம்முறை அந்த நிறுவனத்தின் பிரதிநிதி தம்மை நேருக்கு நேர் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் வாய் மீண்டும் அதை ஏற்க மறுத்தார்.
தமக்குத் தெரிந்த குறைந்தது ஐந்து மருத்துவர்கள், பணம் கொடுத்து விருதுகளை ஏற்கும் முறையை மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
இத்தகைய விருதுகளைப் பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு காட்சிக்கு வைத்தால் அது சட்டவிரோதமான செயலாகக்கூடும்.
சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குவோர், பணம் கொடுத்து விருதுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சுகாதார அமைச்சு நினைவூட்டுகிறது.
அவ்வாறு செய்தால் அது சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் தரத்தைப் பற்றிய உண்மையில்லா, தவறான புரிதலை ஏற்படுத்தும் என்று அது கூறியது.
குளோபல் ஹெல்த் ஏஷியா பசிபிக்கின் செயல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக அமைச்சு தெரிவித்தது.
விளம்பரம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை மீறுவோருக்கு எதிராக மருத்துவப் பதிவுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு எச்சரித்தது.