மலேசியக் காவல்துறை, ஜோகூரின் ஜாலான் செரம்பாங்கில் 7 வயதுச் சிறுவனைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் ஆடவர்கள் மூவரைத் தேடிவருகிறது.
இச்சம்பவம் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவன் சீன நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்றும் மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தைக்கு வர்த்தகப் பங்காளி என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்ட அந்த 41 வயது சந்தேக நபர், கார்களைப் பழுதுபார்ப்பவர். சிறுவனைக் கடத்த அவர் சதித் திட்டம் தீட்டியதாக நம்பப்படுகிறது. மேலும் மூவருடன் சேர்ந்து சிறுவனைக் கடத்தி, அவன் தந்தையிடமிருந்து 300,000 ரிங்கிட் ($85,000) பிணைத்தொகை கேட்க அவர்கள் திட்டமிட்டனர்.
ஆனால், சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் முக்கியச் சந்தேக நபரைக் கைது செய்துவிட்டதாகவும் பிணைப்பணம் ஏதும் தரப்படவில்லை என்றும் மலேசியக் காவல்துறை டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மலேசியர்களான மேலும் மூன்று சந்தேக நபர்களைத் தேடி வருவதாக அது கூறியது.
சிங்கப்பூரரான வர்த்தகர் ஒருவர் தன் மனைவி, குழந்தைகளான மகன், மகள் ஆகியோருடன் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வுசெய்ய ஜோகூர் பாரு சென்றிருந்ததாக சிங்கப்பூர் ஊடகங்கள் கூறின.
வர்த்தகரும் அவர் மனைவியும் கடைக்கான இடத்தைப் பார்வையிட்டபோது குழந்தைகள் இருவரும் வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரிலிருந்து இறங்கிய ஆடவர் சிறுவனைக் கவர்ந்து சென்றார்.
கார் நகரவே சிறுமி தன் பெற்றோரிடம் தகவல் தந்தார். உடனடியாகத் தனது காரில் துரத்திச் சென்ற அந்த வர்த்தகர் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தார்.
அவர்கள் அவரது காரை மோதிவிட்டுத் தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால் அவர் கடத்தல்காரர்களின் கார்க் கதவைக் கெட்டியாகப் பிடித்திருந்ததால் சில மீட்டர் தொலைவிற்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் காரையும் பின்னிருக்கையில் இருந்த சிறுவனையும் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடினர். பொதுமக்கள் இச்சம்பவம் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தந்ததாகக் கூறப்பட்டது.