சிங்கப்பூரின் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனை உட்லண்ட்சில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) திறக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் ஹெல்த் என்றழைக்கப்படும் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறுகிய காலத் தீவிரப் பராமரிப்பு வழங்கும் மருத்துவமனையும் சமூக மருத்துவமனையும் ஒரே வளாகத்திற்குள் அமைந்திருக்கும். சிங்கப்பூரில் இவ்வாறு அமைந்துள்ள முதல் மருத்துவமனை இது.
இதன் நிபுணத்துவ மருந்தகங்களும் சமூக மருத்துவமனைப் படுக்கைகள் 40ம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. 7.7 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட இம்மருத்துவமனை 17 உட்லண்ட்ஸ் டிரைவ் 17ல் அமைந்துள்ளது.
இதன் அவசர சேவைப் பிரிவு உள்ளிட்ட இதர பகுதிகள் 2024ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்படும்.
முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகு உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் 1,000 குறுகிய காலத் தீவிரப் பராமரிப்பு, சமூகப் பராமரிப்புப் படுக்கைகள் இருக்கும். நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் கிட்டத்தட்ட 400 படுக்கைகள் இருக்கும். எதிர்காலத் தேவைகளைச் சமாளிக்க இதில் 1,800 படுக்கைகள் வரை அமைக்க முடியும்.
சிங்கப்பூரின் பொது மருத்துவமனைகள் படுக்கைத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வந்துள்ளன. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின் பின்விளைவுகள் அதற்கான காரணங்களில் ஒன்று.
நிலைமையைக் கையாள மருத்துவமனைகளில் இவ்வாண்டிறுதிக்குள் கூடுதலாக 1,300 படுக்கைகளைச் சேர்க்கும் இலக்கை சுகாதார அமைச்சு கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போ லீ சான், லிம் வீ கியாக், மார்சிலிங்-இயூ டீ நாடாளுமன்ற உறுப்பினர் ஹேனி சோ ஆகியோருக்கு உட்லண்ட்ஸ் ஹெல்த்தின் மருத்துவ நிலையம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றிக் காட்டப்பட்டன.
ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவ நிலையத்தின் வெளிநோயாளிச் சேவைகளை நாடலாம். பேச்சு சிகிச்சை, மறுவாழ்வுச் சேவைகள் போன்றவற்றை மருத்துவமனையின் கூட்டுச் சுகாதாரக் குழு வழங்கும்.
இதனால் அதே மருத்துவர்களின் கவனிப்பில் இருந்தபடி குறுகிய காலத் தீவிர பராமரிப்புச் சேவைகளைப் பெற்ற நோயாளிகள் தளர்த்தப்பட்ட பராமரிப்புச் சேவைகளைப் பெறலாம்.
இவ்வாண்டிறுதிக்குள் 4,000 தாதியரை வேலைக்கு எடுப்பது சிங்கப்பூரின் இலக்கு. அதை விஞ்சமுடியும் என்று தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் திறப்பு நிகழ்ச்சியில் திரு ஓங் பேசினார். மேலும் இவ்வாண்டு இரண்டு புதிய பலதுறை மருந்தகங்கள் திறக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். தெம்பனிஸ் நார்த்திலும் செம்பவாங்கிலும் அவை அமைந்துள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் 30க்கும் அதிகமான பலதுறை மருந்தகங்கள் இருக்கும்.
“மருத்துவமனைகளைக் கட்ட கூடுதல் காலம் ஆகும். ஆனால், கடின உழைப்புடன் கவனமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவமனைகளின் கொள்ளளவு அதிகரிப்பதற்கான முதல் அறிகுறிகளை இப்போது பார்க்கிறோம். உட்லண்ட்ஸ் ஹெல்த் வளாகத்தில் அது தொடங்குகிறது,” என்றார் திரு ஓங்.