தற்போதைய கொவிட்-19 அலை அதன் உச்சத்தை எட்டியிருக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியிருக்கிறார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்று நாள்களாகக் குறைந்து வந்துள்ளதை ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கொவிட்-19 நோயாளிகள் 600-700 படுக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். அது, சிங்கப்பூரின் 10,000 படுக்கைகளைக் கொண்ட வலுவான சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கத் தேவையில்லை என்றார் அவர்.
ஒருங்கிணைந்த தீவிர, சமூக மருத்துவமனையையும் நிபுணத்துவ மருந்தகங்களையும் உள்ளடக்கும் உட்லண்ட்ஸ் ஹெல்த்தின் திறப்புவிழாவில் திரு ஓங் பேசினார்.
டிசம்பர் 12ஆம் தேதியன்று தொற்று எண்ணிக்கை 7,870ஆக இருந்தது. டிசம்பர் 20 நிலவரப்படி, ஏழு நாள் சராசரி தொற்று என்ணிக்கை 6,060ஆக இருந்தாலும், கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இதனால், கொவிட்-19 கிருமி காரணமாக மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை இவ்வாண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டியது.
டிசம்பர் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் 58,300 பேர் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இந்த ஆண்டின் ஆக அதிக எண்ணிக்கை இது.
அதற்கு முந்திய வாரத்தில் 56,043 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஆண்டிறுதிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் என்று திரு ஓங் எச்சரித்துள்ளபோதும், தற்போதைய கொவிட்-19 அலை கட்டுக்குள் இருப்பதாக அவர் நம்புகிறார். பலர் தம்மிடம், குறிப்பாக பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும்படி கேட்டுக்கொண்டதாகத் திரு ஓங் கூறினார். தேவைப்பட்டால் சிங்கப்பூர் அதனைக் கட்டாயமாக்கும் என்றும், இம்முறை, கூடுதல் பாதுகாப்பு தூர இடைவெளிக்கான நடவடிக்கைகளின்றி நம்மால் இதனை எதிர்கொள்ளமுடியும் என்றும் அவர் சொன்னார்.
தொற்றுச் சம்பவங்கள் பொதுவாக அதிகரித்து வரும் நிலையில், கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அமைச்சு கடந்த வாரம் வலியுறுத்தியது.