தனியார் வாடகை கார் சேவை வழங்கும் ‘ரைட்’ நிறுவனம் ஜனவரி மாதம் 2ஆம் தேதியிலிருந்து தனியார் கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோரிடமிருந்து தரகுக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ளும்.
தனது கட்டணங்களைக் கூடுதல் போட்டித்தன்மையுடையதாக்க ரைட் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் குறித்து ரைட் நிறுவனம் அதன் இணையப்பக்கத்தில் டிசம்பர் 22ஆம் தேதியன்று அறிவித்தது.
இதன்மூலம் ரைட் தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களின் வருமானம் அதிகரிக்கும் என்று அது கூறியது.
தற்போது ஓட்டுநர்களிடமிருந்து அது 10 விழுக்காடு தரகுக் கட்டணம் வசூலிக்கிறது.
தரகுக் கட்டணத்துக்குப் பதிலாக வேறு கட்டணங்களை ஓட்டுநர்களிடமிருந்து வசூலிக்கத் திட்டமில்லை என்று ரைட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
ரைட் நிறுவனம் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள், ‘ரைட்டாக்சி’யைத் தவிர மற்ற சேவைகளுக்குத் தொடர்புத் தளக் கட்டணமாக 50 காசு செலுத்த வேண்டும்.
ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து $18க்குக் குறைவான பயணங்களுக்கு 55 காசு கட்டணமும் $18க்கு அதிகமான பயணங்களுக்கு 76 காசு கட்டணமும் செலுத்த வேண்டும்.
ஆனால் இதன் விளைவாக ரைட் நிறுவனத்தின் சேவைகளைக் கூடுதல் பயணிகள் பயன்படுத்துவர் என்றும் அதனால் ரைட் நிறுவனம் மட்டுமே பலனடையும் என்றும் ஓட்டுநர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் கட்டணம் அதிகரிக்கப்படாததால் ஓட்டுநர்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.