பயணிகள் இனி வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் செயல்படும் குறிப்பிட்ட ஏழு ரயில் நிலையங்களிலும் பிரத்தியேகமான ரயில் ஒன்றிலும் உள்ளூர் கலைஞர்களால் வரையப்பட்ட கண்ணைப் பறிக்கும் கலை அம்சங்களையும் ஓவியங்களையும் ரசித்தவாறு ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.
மக்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது அவர்களுக்குக் கலையை எளிதில் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் தேசிய கலை மன்றம் மூன்றாண்டு பங்காளித்துவத்தில் திங்கட்கிழமை இணைந்தது.
இவ்வாண்டிற்கான சிங்கப்பூர் கலை வாரத்தின் தொடக்கமாக கலை அம்ச கருப்பொருளுடன் காட்சியளிக்கும் ரயில் சேவையையும் ரயில் நிலையங்களையும் பொதுமக்கள் திங்கட்கிழமையிலிருந்து இம்மாதம் 28ஆம் தேதி வரை காணலாம்.
கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் லோ யென் லிங், அவ்விரு அமைப்புகளுக்கு இடையிலான பங்காளித்துவத்தை திங்கட்கிழமை காலை தொடங்கிவைத்தார்.
“பொதுமக்கள் அனைவரும் எளிதில் கலை அம்சங்களை ரசிக்க வேண்டும் என்பதற்கான வசதியை இந்தப் பங்காளித்துவம் ஏற்படுத்தித் தந்துள்ளது. ரயில் பயணம் அவர்களுக்குப் புத்துணர்வை ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்டு, சிங்கப்பூர் வரலாற்றை நினைவுகூரும் கலை அம்சங்களை வடிவமைத்த உள்ளூர் கலைஞர்களை நாம் பாராட்டும் முயற்சியாகவும் அமைந்துள்ளது,” என்றார் அவர்.
மேலும், சிங்கப்பூர் கலை வாரம் கொண்டாட்டங்களை முன்னிட்டு டௌன்டவுன் பாதை, வட்ட ரயில் பாதை ஆகியவற்றில் அமைந்துள்ள இதர சில ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் கலை அம்சங்களை எதிர்பார்க்கலாம்.