துவாஸ் எரியாலையில் 2021ஆம் ஆண்டில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஓர் அங்கமாக அங்கு பாதுகாப்பை மேற்பார்வையிட புதிய இடர் மதிப்பீட்டுக் குழு ஒன்றை தேசிய சுற்றுப்புற வாரியம் ஏற்படுத்தியுள்ளது.
அந்த எரியாலை வெடிப்புச் சம்பவம் குறித்து ஜனவரி 9ஆம் தேதி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் விவரித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வாரியத்தின் மூன்று அதிகாரிகள் ஆலையின் மின் விசைகள் உள்ள அறையில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய அனுப்பப்பட்டதாகத் திருவாட்டி ஃபூ தெரிவித்தார். அந்த அறையில் உள்ள தொழிற்சாலை பயன்பாட்டு மின்விசிறியை நிறுத்த முடியாமல் போனதால் அந்த மூன்று அதிகாரிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
அப்பொழுது அந்த மின் விசைகள் உள்ள அறையில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததால் அங்கு சென்ற மூன்று அதிகாரிகளில் குவோக் இயாவ் வாய், வீ எங் லெங் ஆகிய இரு அதிகாரிகள் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
மூன்றாவது அதிகாரியான திரு லோ யின் சூனுக்கு மூன்றாம் நிலைத் தீக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்பொழுது குணமடைந்து பணிக்கு திரும்பிவிட்டதாக திருவாட்டி கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
அந்த மூன்று அதிகாரிகளும் வாரியத்தின் மின்சார பராமரிப்புப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்று திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் மனிதவள அமைச்சும் தேசிய சுற்றுப்புற அமைச்சின் இரு ஊழியர்களை வேலையிட பாதுகாப்பு, சுகாதார சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டியது.