ஜோகூர் பாரு: சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் புதிய ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டணம் போட்டித் திறன்மிக்கதாக இருக்கும். அந்தத் திட்டம் நிறைவடையும்போது கட்டணம் பற்றி முடிவு செய்யப்படும்.
மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் இதனை ஜனவரி 11ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரின் தற்காலிக போக்குவரத்து அமைச்சரான சீ ஹொங் டாட், கட்டணங்களை நிர்ணயிப்பதில் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவையை நடத்தும் ஆர்டிஎஸ், தேவை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளும் என்றார்.
ஆர்டிஎஸ் ரயில் சேவை, சிங்கப்பூரின் ரயில் சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டி, மலேசிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான பிரசாரானா ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும்.
ஆர்டிஎஸ் ரயில் தொடர்புக்கான கட்டணத்தை வர்த்தக ரீதியில் நிர்ணயிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன என்று ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் திரு சீ ஹொங் டாட் கூறினார்.
ரயில் இணைப்புத் திட்ட கட்டுமானத்தின் முக்கிய மைல்கல் அடைந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆர்டிஎஸ் ரயில் சேவை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நம்பகமான, வலுவான சேவை வழங்குவதற்கான செலவுகளையும் பரிசீலனைச் செய்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்,” என்று திரு சீ மேலும் தெரிவித்தார்.
நான்கு கிலோ மீட்டர் நீள ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தின் மொத்த மதிப்பு 10 பில்லியன் ரிங்கிட் (S$2.87 பில்லியன்) என மலேசிய நாளேடு ‘த ஸ்டார்’ தெரிவிக்கிறது. இதில் சிங்கப்பூர் 61 விழுக்காடு செலவை ஏற்றுக் கொள்கிறது.
ரயில் சேவை தயாரானதும் ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்தில் 10,000 பயணிகள் பயணம் செய்ய முடியும். சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்தையும் ஜோகூரில் உள்ள புக்கிட் சாகர் நிலையத்தையும் இது இணைக்கிறது. முதல் ஆண்டில் நாளுக்கு 40,000 பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.