ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டத்தில் (ஆர்டிஎஸ்) ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் நிகழ்ச்சி, இன்று (ஜனவரி 11) நடைபெற்றது.
சென்ற மாத (2023 டிசம்பர்) இறுதியில், சிங்கப்பூரையும் ஜோகூர் பாருவையும் இணைக்கும் 17.1 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் எல்லை இணைப்புப் பாலக் கட்டுமானம் நிறைவுபெற்றது. ஜோகூர் நீரிணையின்மேல் இந்த எல்லை இணைப்பு கட்டப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் கட்டுமானம் நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கலந்துகொண்டனர்.
340 டன் எடையுள்ள இந்த இணைப்பு, கடல்மட்டத்திலிருந்து 26 மீட்டருக்குமேல் உயரத்தில் அமைந்துள்ளது.
பலத்த காற்று வீசிய நிலையில் மிகத் துல்லியமாக மேற்கொள்ளவேண்டிய இப்பணிகள் பாதுகாப்பான முறையிலும் உரிய நேரத்திலும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய அணுக்கமாகக் கண்காணித்ததாக இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகள் கூறின.
ஆர்டிஎஸ் இணைப்புக் கட்டுமானம் நிறைவடைந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சியில், நினைவுக்குறிப்புப் பலகைகளில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
2023 டிசம்பர் 31ஆம் தேதி, ஆர்டிஎஸ் இணைப்பு ரயில் திட்டம் தொடர்பான பணிகள் 65 விழுக்காடு நிறைவடைந்ததாக மலேசியா தெரிவித்தது.
சிங்கப்பூர் தரப்பில் அதற்கான உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் மூன்றில் இரண்டு பங்கு நிறைவுபெற்றுள்ளன.
இந்த ரயில் சேவை, 2026ஆம் ஆண்டு டிசம்பரில் பயணிகளுக்கு சேவை வழங்கத் தொடங்கும். இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகளும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஜோகூரின் புக்கிட் சாகார் ரயில் நிலையத்தை சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்துடன் இணைக்கும் இந்த ரயில் சேவை தொடங்கியபின், ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பேர் வரை இதில் பயணம் செய்ய இயலும்.
இரு நகரங்களுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு இந்த ரயில் சேவை மூலம் இடம்பெறும் என்றும் அதனால் தரைவழிப் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டிஎஸ் ரயில்கள், காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சேவை வழங்கும் என்று மலேசியாவின் எம்ஆர்டி கார்ப் நிறுவனம் தெரிவித்தது.
போக்குவரத்து உச்ச நேரத்தில் நான்கு நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 30 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் சேவை வழங்கும் என்று அது கூறியது.
இணைப்புக் கட்டுமானம் நிறைவுபெற்றுவிட்டதால் ஆர்டிஎஸ் ரயில் திட்டத்துக்கான இதர உள்கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் இருதரப்பிலும் தொடரும் என்று இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகள் குறிப்பிட்டன. ரயில் பாதை அமைத்தல், சுரங்கங்கள், ரயில் நிலையங்கள், சுங்கக் கட்டடங்கள் போன்றவற்றின் கட்டுமானத்தை அமைச்சுகள் சுட்டின.
2024 டிசம்பருக்குள் இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டிஎஸ் இணைப்புப் பாதை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரு பிரதமர்களும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியைப் பார்வையிட்டனர்.