எலி பிடிக்கும் வேலையில் தற்போது இயந்திர மனிதர்கள் இறங்கியுள்ளன.
சிறிய காலணி பெட்டி அளவிலான, ரேடியோ அலைகளால் கட்டுப்படுத்தப்படும் இந்தக் கருவியின் ஒவ்வொரு முனையிலும் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இருண்ட, இடுக்குகளைப் படம் பிடிக்கும்.
அந்தக் காட்சிகளைக் கொண்டு எலிகள் இருக்கும் இடங்களை பூச்சிக் கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிகிறார்கள். இந்த இயந்திர மனிதக் கருவிகள், கூரைப் பகுதியிலுள்ள கேபிள்கள், பொருள்கள் என எல்லா இடங்களிலும் ஊர்ந்து படம் பிடிக்கும்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) உருவாக்கி, தயாரித்த இந்தத் தொழில்நுட்பத்தை தொடக்கத்திலேயே பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனமான வெர்மினேட்டர் கைக்கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் 2020ஆம் ஆண்டு முதல் அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ஊழியர்களின் பணியை எளிதாக்குகிறது,
இயந்திர மனிதக் கருவி பயன்படுத்தும்போது செயற்கைக் கூரைகளை (ஃபால்ஸ் சீலிங்) பார்வையிட இரண்டு ஊழியர்களுக்குப் பதில் ஒருவர் சென்றால் போதும். அதனால் நிறுவனம் அதிக வேலைகளை சமாளிக்கமுடியும் என்று வெர்மினேட்டர் உதவி இயக்குனர் பிரையன் ஓங் கூறினார்.
பொதுவாக விளக்குகள் மற்றும் பிற மின்சாதனங்களை மேலிருந்து தொங்கவிடவும், மின்கம்பிகள், குழாய்களை மறைக்கவும் செயற்கைக் கூரைகள் உதவுகின்றன. அதே நேரத்தில் அந்த இருண்ட, குளிர்ந்த அடுக்கு எலிகள் போன்ற விலங்குகளுக்கும் பூச்சியினங்களுக்கும் சிறந்த வீடாகவும் உள்ளது. மின்கம்பிகளை மெல்லுவதன் மூலம் அல்லது கிருமிகளை அவை பரப்புவதன் மூலம் அழிவை ஏற்படுத்தக்கூடும்.
தெம்பனிஸ் நகர மன்றமும் எஸ்யுடிடி-யின் அந்தக் கருவியை சோதனை முயற்சியாகப் பயன்படுத்திப் பார்த்துள்ளது.
பயனளிக்கும் பூச்சிக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கொண்டிருக்க கடைத்தொகுதிகள், கடை நடத்துநர்களை தேசியச் சுற்றுப்புற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதில் சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடித்தல், முறையான கழிவகற்றும் நிர்வாகம், தொற்றுநோய்களைத் தடுக்க உரிமம் பெற்ற பூச்சிக் கட்டுப்பாட்டு நிர்வாகிகளை ஈடுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.
தொழில்துறையின் தேவைகளைப் பற்றி அறிந்ததும் பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு இயந்திர மனிதக் கருவியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக அக்கருவியை உருவாக்கிய எஸ்யுடிடி குழுவின் பேராசிரியர் மோகன் ராஜேஷ் எலாரா கூறினார்.
செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட அக்கருவியின் மற்றொரு பதிப்பு, எலியின் எச்சங்களை ‘ஸ்கேன்’ செய்வதன் மூலம் அது எந்த வகையான எலி என்பதைக் கண்டறியும் என்று பேராசிரியர் மோகன் கூறினார்.
பாம்புகளை பயமுறுத்தும் இயந்திர மனிதக் கருவி ஒன்றையும் எஸ்யுடிடி குழு உருவாக்கியுள்ளது.
நஜா எனப் பெயரிடப்பட்ட அந்த இயந்திர மனிதக் கருவி குறிப்பிட்ட இடங்களில் சுற்றி கூர்மையான அதிர்வுகளை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் கந்தகம், பூண்டு தூள் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட வாசனையை வெளியிடுகின்றன. இது ஒரு பொதுவான பாம்பு விரட்டி.
“பாம்புகள் கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள். அவை யாரும் இல்லாத அமைதியான பகுதிகளுக்குச் செல்லும்,” என்றார் பேராசிரியர் மோகன். “இந்த அதிர்வுகளும் வாசனைகளும் மனிதர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் வைத்திருக்கவும் அவற்றை விரட்டுவதற்குப் போதுமானவை,” என்றார் பேராசிரியர் மோகன்.