செம்பவாங் வட்டாரத்தில் உள்ள சன் பிளாசா கடைத்தொகுதியின் தரைத்தளத்தில் 67 வயது ஆடவர் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார்.
அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவம் ஜனவரி 15ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
காயமடைந்த ஆடவர் குறித்து பிற்பகல் 2.05 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
அந்த ஆடவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டார் என்று நம்பப்படுகிறது.
கத்திக்குத்துக் காயங்களுடன் அந்த ஆடவர் சுயநினைவின்றி கிடப்பதைக் காட்டும் படங்கள் ஜனவரி 15ஆம் தேதி பிற்பகல் 3 மணியிலிருந்து சமூக ஊடகத்தில் வலம் வந்தன.
தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொள்வதற்கு முன்பு அந்த ஆடவர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததாக மெக்டோனல்ஸ் விரைவு உணவகத்தின் மேலாளரான 28 வயது திரு ஹஃபிசுல் ரசாலி தெரிவித்தார்.
கடைத்தொகுதியின் பாதுகாவல் அதிகாரிகளிடமிருந்து உதவி கேட்க முயன்றதாகவும் திரும்பி வருவதற்குள் காவல்துறை சம்பவ இடத்தை அடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.