பெரிய நாடுகள் அனைத்துலக சட்டத்தை மீறும்போது சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமை (ஜனவரி 15) அன்று தெரிவித்தார்.
ஏனெனில் அனைத்துலக சட்டம் இல்லாத உலகில், பலம் படைத்தவன் வைத்ததுதான் சட்டம் என்ற கொள்கை வலுப்பெறும். இதனால், சிறிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்.
“தனியே செயல்பட்டால் நமது குரலுக்கு அதிக மதிப்பு இராது. ஆனால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் அதற்கு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அனைத்துலக சட்டத் துறை ஏற்பாடு செய்த மாநாட்டில் அமைச்சர் சண்முகம் முக்கிய உரையாற்றினார்.
அதில் கலந்துகொண்ட 200 பங்கேற்பாளர்களில் அனைத்துலக நீதிமன்றங்களின் நீதிபதிகள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், தூதரகப் பிரிதிநிதிகள், உள்ளூர், வட்டார நாடுகளின் சட்ட நிறுவனங்களைச் சேர்ந்தோர் அடங்குவர்.
திரு சண்முகம் தமது உரையில், அனைத்துலக சட்டத்தின் முக்கியத்துவம், அனைத்துலக ரீதியில் அதிகாரம் செலுத்தும் முறையின் எதார்த்தநிலை ஆகியன பற்றிக் குறிப்பிட்டார். அதுபோன்ற நிலையில், அனைத்துலக சட்டத்தை மீறும் வல்லரசுகளுக்கு எதிராக சிறிய நாடுகள் எவ்வாறு செயல்படலாம் என்பது பற்றியும் அவர் சொன்னார்.
சோவியத் ஒன்றியம் 1991ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அனைத்துலக ஒழுங்குமுறை அமெரிக்கா, பலதரப்பு அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக பண நிதியம் ஆகியவற்றின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது.
கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் தொடரும் உக்ரேன், காஸா போர்களால் இந்த ஒழுங்குமுறை நலிந்து வருகிறதோ என்ற கேள்வி எழுகிறது என்று திரு சண்முகம் கூறினார்.
பலதரப்பு அமைப்புகளை வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் சொந்த நலன்களுக்காக அடிக்கடி பயன்படுத்துவது அல்லது தூற்றுவது என்ற நிலை எழுந்துள்ளதால் அந்த அமைப்புகள் தங்கள் நம்பகத்தன்மையை இழந்து வருவதாகக் கூறும் ஒரு கட்டுரையை அமைச்சர் சண்முகம் மேற்கோள் காட்டினார்.