எஃப் 1 அல்லது மற்ற ஒப்பந்தங்களால் அரசாங்கத்துக்குப் பாதகம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்ல ஆதாரம் ஏதும் இல்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஜனவரி 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
“எல்லா ஒப்பந்தங்களிலும் அனைத்து அம்சங்களையும் அரசாங்கம் மிகவும் கவனமாக ஆராய்ந்தது. இதற்காகத் சுதந்திரமான ஆலோசனையுடன் கூடிய ஆய்வு நடத்தப்பட்டது,” என்று அமைச்சு கூறியது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து, இந்தத் தகவலை அமைச்சு வெளியிட்டது.
இந்நிலையில், சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அமைச்சு கூறியது.
எஃப் 1 கார் பந்தயம் 2008ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாக நடத்தப்பட்டது.
550,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளை சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயம் ஈர்த்துள்ளது.
அத்துடன் அதன்மூலம் ஏறத்தாழ $2 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
2008ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.