ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் தின ஊர்வலங்கள் மேளதாளங்களோடு, பக்திப் பரவசத்தோடு கோலாகலமாக நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தேறிவருகின்றன.
இவ்வாண்டு தைப்பூசம் வாரநாளில் இடம்பெற்றாலும் பக்தர்கள் பக்திக்கே முதலிடம் கொடுப்பதால் மொத்தம் 25,000 பக்தர்களை எதிர்பார்ப்பதாகக் கூறினர் ஏற்பாட்டுக் குழுவினர்.
தைப்பூச ஊர்வலம் ஜனவரி 24ஆம் தேதி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இரவு 11.30 மணிக்குத் தொடங்கி ஜனவரி 25ஆம் தேதி இரவு 11 மணிக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நிறைவடையும்.
ஜனவரி 24ஆம் தேதி, புதன்கிழமை வெள்ளி ரத ஊர்வலமும் நடைபெறும். காலை 5 மணிக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலைச் சென்றடையும். பின்பு, மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தை இரவு 9 மணிக்குச் சென்றடையும்.
அலகு மற்றும் ரதக் காவடிகளுக்கான பங்கேற்பு ரசிதுகளை ஜனவரி 20ஆம் தேதிக்குள் https://thaipusam.sg/ இணையத் தளத்தில் வாங்கவேண்டும். உதவி தேவைப்படுவோர் இரு கோயில்களையும் நாடலாம்.
வியாழன் ஜனவரி 19ஆம் தேதி காலையில் எடுக்கப்பட்ட கணக்குப்படி இதுவரை மொத்தம் 253 அலகு மற்றும் ரதக் காவடிகள், 131 பால் காவடிகள், 14 தொட்டில் காவடிகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு முதியவர்களும் பெருமாள் கோயிலிலிருந்து நடக்க இயலாதவர்களும் பால்குடத்துக்காக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் சீட்டு வாங்கி அங்கேயே செலுத்திவிடலாம்.
இசைக்குழுக்களுக்கு நற்செய்தி
சென்ற ஆண்டு தைப்பூசத்தில் மூன்றே நேரடி இசைக் கூடங்கள் இருந்தன. இவ்வாண்டோ, மொத்தம் ஐந்து நேரடி இசைக் கூடங்கள் இடம்பெறவுள்ளன. அங்கு இசைக்குழுக்கள் இசை முழங்க, காவடிகள் ஆடலாம்.
மேலும், இவ்வாண்டு ஒவ்வொரு பஜன், உருமி மேள இசைக்குழுவுக்கும் பாத ஊர்வலப் பாதையில் நான்கு இசைக் கருவிகளை வாசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஓர் இசைக்கருவியே அனுமதிக்கப்பட்டது.
“இச்சலுகைகளால் இவ்வாண்டு தைப்பூசம் மேலும் சிறப்பாக இருக்கும். பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் வரும் ஆண்டுகளில் தைப்பூசத்தை மேலும் நன்றாகக் கொண்டாடலாம்,” என்றார் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் செயற்குழு உறுப்பினர் திரு முத்து வீரப்பன்.
அனைத்து பஜனை (தவில், நாதஸ்வரம் உள்ளடக்கியவை), உருமி மேளக் குழுக்களும் பாத ஊர்வலப் பாதையில் இசைக்கருவிகளை வாசிக்க இணையத்தில் முன்கூட்டியே, ஜனவரி 22க்குள் பதிவுசெய்யவேண்டும். இசைக்கருவிகளுக்கும் ஒலிபெருக்கிகளுக்குமான கைப்பட்டையையும் அவற்றை வாசிப்பவர்களுக்கான கைப்பட்டையையும் ஜனவரி 23ஆம் தேதிக்குள் இந்து அறக்கட்டளை வாரிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
காவடிகள் காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஊர்வலப் பாதையிலும் நேரடி இசைக் கூடங்களிலும் வாசிக்க, கலாசார இசைக்குழுக்களின் உதவியை நாடலாம்.
கோயிலுக்குள் நாள் முழுவதும் நாதஸ்வர இசை மழைத் தொடரும்.
பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம்
தைப்பூச தினத்தன்று அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் அருகாமையில் அன்னதானம் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படும்.
“12,000 பேருக்கு மதிய உணவு வாழையிலையில் கோயிலின் எதிர்புறம் உள்ள கூடாரத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். ஒரே நேரத்தில் கிட்டதட்ட 700 பேர் அமர்ந்து உண்ணலாம்.” என்றார் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் தலைவர் ம. சாமிநாதன்.
அதற்கும் முன்பு, காலை 2 மணியிலிருந்து, மற்றும் மாலை 4 மணிக்குப் பின்பும் தொடர்ச்சியாக கோயிலில் பிரசாதங்கள் வழங்கப்படும்.
பக்தர்களுக்குக் கைகொடுக்கும் தண்ணீர்ப் பந்தல்கள்
இவ்வாண்டு தனிநபர்கள் மொத்தம் 23 தண்ணீர்ப் பந்தல்களை அமைத்து பக்தர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டவுள்ளனர்.
அவ்வாறு 1963லிருந்து வாழையடி வாழையாக சேவையாற்றியுள்ளனர் கெங் செங் பள்ளியாசிரியர் திரு கருப்பையா ரவிந்திரன், 65, மற்றும் குடும்பத்தினர்.
“இதன்வழி பக்தர்களின் தாகத்தைத் தீர்த்த மனநிறைவு எனக்கு இருக்கிறது,” என்றார் திரு கருப்பையா.
இவ்வாண்டு கிட்டதட்ட 1,500 தொண்டூழியர்கள் சேவையாற்றுவது மற்றொரு சிறப்பு அம்சம்.
தைப்பூசம் 2024 பற்றிய மேல்விவரங்களுக்கு https://thaipusam.sg/ இணையத் தளத்தை நாடலாம்.