சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஆங் பாவ் பணத் தாள்கள் ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல் நாளான நேற்று (24 ஜனவரி) ஏராளமானோர் ஏடிஎம் இயந்திரங்கள் முன்பு வரிசையில் காத்திருந்து ஆங் பாவுக்கு புதிய பணத் தாள்களை எடுத்தனர்.
கடந்த ஆண்டுகளைப் போல முன்பதிவின்றி குறிப்பிட்ட டிபிஎஸ், ஓசிபிசி, ஓயுபி ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக புதிய பணத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன.
தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் காலை 9.30 மணியளவில் இரண்டு பிஒஎஸ்பி ஏடிஎம் இயந்திரங்களுக்கு முன்பு முப்பது பேர் கூடியிருந்தனர். காலை 10.10 மணியளவில் கூட்டம் அறுபதுக்கு அதிகரித்தது.
தன்னை திருமதி லோ என்று குறிப்பிட்ட மாது ஒருவர், காலை 10.00 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் புதிய தாள்கள் விநியோகிப்பதற்கு முன்பாக முதல் நபராக நின்று கொண்டிருந்தார்.
“நான் சாலையின் மறுபக்கத்தில்தான் குடியிருக்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக இப்படித்தான் வரிசையில் காத்திருப்பேன்,” என்று 75 வயது ஓய்வுபெற்ற மாது கூறினார்.
தோ பாயோவில் உள்ள டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள இடங்களிலும் பிற்பகலுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது.
டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகியவை தங்களுடைய இணையப் பக்கத்தின் வழியாக ஜனவரி 17ஆம் தேதி ஆங் பாவுக்கு புதிய பணத் தாள்களுக்கு முன்பதிவுகளை தொடங்கின.
இணையத்தில் வெற்றிகரமாக முன்பதிவு செய்தவர்கள் பழைய தாள்களுக்கு புதிய தாள்கள் பெற்றுக் கொள்ள ஜனவரி 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.