நான்காவது கட்டடத்தைக் கட்ட மரினா பே சேண்ட்சுக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிக் காலாண்டு நிலவரப்படி, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தகக் கட்டடங்கள் தொடர்பாக ஆணையம் வெளியிட்ட தரவுகளைப் பொறுத்தவரை, மரினா பே சேண்ட்சின் தற்போதைய மூன்று கட்டடங்களுக்குப் பக்கத்தில் ஹோட்டல் மற்றும் சில்லறை வர்த்தகத்துக்கான கட்டடம் ஒன்றைக் கட்ட பச்சைக்கொடி காட்டப்பட்டது.
பேஃபிரண்ட் அவென்யூ, ஷியர்ஸ் அவென்யூ, ஷியர்ஸ் லிங்க் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள காலி நிலப்பகுதியில் நான்காவது கட்டடத்தைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்தில் 153,100 சதுர மீட்டர் பரப்பளவில் ஹோட்டல் கட்டப்படும் என்று ஜனவரி 26ஆம் தேதியன்று ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த ஹோட்டல் 587 அறைகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, புதிய கட்டடத்தில் 12,185 சதுர மீட்டர் பரப்பளவில் சில்லறை வர்த்தகப் பகுதியும் இடம்பெறும்.
நான்காவது கட்டடத்தில் 1,000 அறைகள் கொண்ட ஹோட்டல் கட்டப்படும் என்று 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மரினா பே சேண்ட்ஸ் அறிவித்திருந்தது.
முதலில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மரினா பே சேண்ட்சிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அதுகுறித்து மேல் விவரங்களை வெளியிட அது மறுத்துவிட்டது.
2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதிக்குள் நான்காவது கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளை மரினா பே சேண்ட்ஸ் முடிக்க கால அவகாசம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2066ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அதற்கான நிலப்பகுதியை அது குத்தகைக்கு எடுத்துள்ளது.