நிக்கல் எனும் வெள்ளை உலோகம் சம்பந்தப்பட்ட மோசடியில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் வர்த்தகர் ஒருவர் மீது புதன்கிழமையன்று (ஜனவரி 31) மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்நபர் மேலும் ஒரு வாரத்துக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.
கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இங் யு ஷி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. என்வி குளோபல் டிரேடிங் எனும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான இங், 500,000 வெள்ளித் தொகையை நல்லப் பணமாக மாற்ற முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
36 வயது சிங்கப்பூரரான இங், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 13 புசோரா ஸ்திரீட்டில் உள்ள கடைவீடு ஒன்றை கான் வீ பின் என்பவரிடம் 500,000 வெள்ளிக்கு விற்று அவ்வாறு செய்ய முயன்றதாக நம்பப்படுகிறது.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைதான இங், மொத்தம் 106 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். நிக்கல் வர்த்தகத்தில் அவர் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (1.5 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.