சிங்கப்பூரில் டாக்சி சேவையை நடத்தும் டிரான்ஸ்-கேப் நிறுவனத்தை கிராப் நிறுவனம் வாங்கியது தொடர்பாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் இரண்டாவது முறையாக மறுஆய்வு செய்கிறது.
கிராப் நிறுவனத்துக்கும் டிரான்ஸ்-கேப் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் நிறைவேறினால் போட்டித்தன்மை குறையக்கூடும் என்ற அக்கறை இன்னும் தனக்கு இருப்பதாக ஆணையம் கூறியது.
குறிப்பிட்ட கடப்பாடுகளைக் கொண்டிருப்பதாக கிராப் தெரிவித்துள்ளபோதிலும் ஆணையத்துக்கு இருக்கும் அக்கறைகள் குறித்து அது போதுமான விளக்கம் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
டரான்ஸ்-கேப் நிறுவனம் கிராப்புக்கு கைமாறினால் டிரான்ஸ்-கேப் டாக்சி ஓட்டுநர்கள் மற்ற நிறுவனங்களின் பயணத்தளச் செயலிகளைப் பயன்படுத்தாமல் கிராப் பயணத்தளச் செயலியை மட்டும் பயன்படுத்தும் நிலையை உருவாக்கக்கூடும் என்று ஆணையம் அக்கறை தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்-கேப் நிறுவனத்தை வாங்க கிராப் முன்வந்துள்ளதாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதை அதே நாளன்று கிராப் நிறுவனம் உறுதி செய்தது.
இரண்டாவது மறுஆய்வு நிறைவடைய 120 வர்த்தக நாள்கள் எடுக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
எனவே, டிரான்ஸ்-கேப் டாக்சி நிறுவனத்தை கிராப் வாங்குவது தொடர்பாக இவ்வாண்டின் நடுப்பகுதியில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.