மலேசியாவின் 17வது மாமன்னராக ஜனவரி 31ஆம் தேதியன்று அரியணை ஏறிய ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லீ சியன் லூங்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
மாமன்னர் இப்ராகிமின் வழிகாட்டுதலின் பேரில் மலேசியா புதிய உச்சங்களை எட்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக அதிபர் தர்மன் கூறினார்.
“இருநாட்டு மக்களுக்கிடையே இருக்கும் மிக நெருக்கமான உறவை அடித்தளமாகக் கொண்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வலுவான நல்லுறவு இருந்து வருகிறது. அத்துடன் இருநாடுகளின் அரசாங்கங்களிடையே மிக வலுவான ஒத்துழைப்பும் நீண்டகால வர்த்தக உறவும் நீடித்து வருகின்றன.
“இருநாட்டு மக்களின் நன்மைக்காகவும் அவர்கள் பலனடையும் இந்த நல்லுறவு தொடர மாமன்னருடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறேன்,” என்று அதிபர் தர்மன் தமது கடிதத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளமாறு மாமன்னர் இப்ராகிமுக்கு அதிபர் தர்மன் அழைப்பு விடுத்துள்ளார்.
மாமன்னர் இப்ராகிமுக்கு பிரதமர் லீ சியன் லூங்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார்.
“ஒருங்கிணைந்த, முன்னோக்கிச் செல்லும் மலேசியாவை உருவாக்க இலக்கு கொண்டிருக்கிறீர்கள். இது மலேசியாவின் அடுத்த கட்ட மேம்பாட்டுக்கு நன்மை பயக்கும்,” என்று திரு லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டார்.
உலகளாவிய நிலையில் நிலையற்றத்தன்மை அதிகரித்து வரும் வேளையில், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பங்காளித்துவம் மிகவும் முக்கியம் என்றார் பிரதமர் லீ.
அப்போதுதான் இருநாட்டு மக்களின் செழுமை, பாதுகாப்பு தொடரும் என்றார் அவர்.
இரு அண்டை நாடுகளின் உறவு பன்முகத்தன்மையுடையது என்றும் அனைத்துச் சவால்களையும் சமாளிக்கக்கூடியது என்றும் கூறிய பிரதமர் லீ, மாமன்னர் இப்ராகிமின் ஆட்சிக்காலத்தில் மலேசியாவுடனான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சிங்கப்பூர் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.