சைனாடவுனின் 195 பெர்ல்’ஸ் ஹில் டெரஸ் (195PHT) கட்டடத்தில் வாடகைக்குத் தங்கி இருக்கும் சுயேச்சை கலைக் குழுவினருக்கு மாற்றிடம் கண்டறியவும் வாடகைக் குத்தகைக் காலத்தை மதிப்பீடு செய்யவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அந்தக் கட்டடத்தின் குத்தகைக் காலம் 2025 மார்ச் மாதம் காலாவதியாகிறது. கட்டடம் அமைந்துள்ள இடத்தில் அடுத்த பத்தாண்டுகளில் 6,000 பொது மற்றும் தனியார் வீடுகளைக் கட்டி எழுப்பும் பெருந்திட்டம் ஒன்றை நகர மறுசீரமைப்பு ஆணையம் வகுத்து உள்ளது.
வாடகை உயர்வு, நிச்சயமற்ற குத்தகைக் காலம் ஆகியன காரணமாக 195PHT மற்றும் எமிலி ஹில் கட்டடங்களில் தங்கி இருப்போர் சிரமத்தை எதிர்நோக்குவதாக கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) 195PHT கட்டடத்தைச் சுற்றிப் பார்த்த அமைச்சர் சண்முகம், அங்குள்ள வாடகைதாரர்களை சந்தித்துப் பேசினார். 20க்கும் மேற்பட்ட உள்வாடகைதாரர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் நில ஆணையம் அந்தக் கட்டடத்தை வாடகைக்கு விட்டு உள்ளது. அந்த ஆணையம் சட்ட அமைச்சுக்கு உட்பட்டது.