திருவாட்டி லிம் சோக் சூ, 67, ஆங்கர்வேல் வட்டாரத்தில் வசிக்கிறார்.
அவரது குடும்பத்தில் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு இருந்தபோதும் அவர் சில ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனையைச் செய்து கொள்ளவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கி நிறுத்துமிடத்திற்கு அருகில், இலவசப் பரிசோதனை குறித்த விளம்பரத் துண்டுச்சீட்டைப் பார்த்த பிறகு பரிசோதனைக்குச் செல்ல முடிவெடுத்ததாகக் கூறுகிறார் திருவாட்டி லிம்.
செங்காங் பலதுறை மருந்தகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையைச் செய்துகொண்டார்.
அதனையடுத்து அக்டோபரில் மீண்டும் அந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளும்படி அவருக்குக் கூறப்பட்டது. அதில் அவருக்கு ‘ஸ்டேஜ் 0’ எனப்படும் பால் சுரப்பிகளில் மட்டும் காணப்படும் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. மார்பகத் திசுக்களுக்கு அப்பால் பரவாத புற்றுநோய் ‘ஸ்டேஜ் 0’ என வகைப்படுத்தப்படுகிறது.
“எனக்கு கட்டியோ வலியோ இல்லை. வேறெந்த அறிகுறிகளும் காணப்படவில்லை,” என்கிறார் திருவாட்டி லிம்.
கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு அவருக்கு ‘ஸ்டேஜ் 1’ புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அந்தக் காயம் குணமானதும் கதிரியக்க சிகிச்சைக்குச் செல்லவிருக்கிறார். புற்றுநோய் உயிரணுக்கள் ஏதும் உடலில் எஞ்சியிருந்தால் அவற்றை அழிக்க கதிரியக்க சிகிச்சை உதவும்.
வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் நடத்திய குறைந்த வருமானப் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனையில், பாதிப்பு கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் திருவாட்டி லிம்.
அந்தப் பரிசோதனையில் கிட்டத்தட்ட 600 பேர் பங்குபெற்றனர். அவர்களில் இரண்டு விழுக்காட்டினருக்கு, அதாவது 12 பேருக்கு, கூடுதல் பரிசோதனை தேவைப்பட்டது.
கடந்த மே மாதம் தொடங்கிய இந்த ஓராண்டுத் திட்டம் குறைந்த வருமானப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறியவும் பாதிப்பு அடையாளம் காணப்படுவோருக்கு ஆதரவு வழங்கவும் வகைசெய்கிறது.
அத்திட்டத்தின்கீழ், மார்பகப் புற்றுநோய் உறுதிசெய்யப்படுவோருக்கு மொத்தம் $10,000 நிதியுதவி வழங்கப்படும். அதில் $5,000 வாழ்க்கைச் செலவினத்திற்கான உதவியாகவும் $5,000 வரையில் இதர செலவுகளுக்கான உதவியாகவும் வழங்கப்படும்.
‘வடகிழக்கு வட்டாரத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போரிடுவோருக்கான ஆதரவுத் திட்டம்’ தொடர்பில் வடகிழக்கு சமூக மேம்பாடு மன்றம், சிங்ஹெல்த்துடன் இணைந்து செயல்பட்டது.
சிங்கப்பூர் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுவதால் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார்.