பாசிர் ரிஸ் கடற்கரை, செம்பவாங் பூங்கா கடற்கரைக்கு செல்பவர்கள் அங்கு நீந்த வேண்டாம் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த கடற்கரையில் உள்ள நீரில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகமாக இருப்பதாகவும் அதனால் வயிற்றுக் கோளாறு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அமைப்பு கூறியது.
மேலும் காற்று அலையாடல் உள்ளிட்ட நீரில் மூழ்கி விளையாடும் நீச்சல் விளையாட்டுகளில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீரில் விளையாடும்போது மக்கள் எளிதில் கடல்நீரைக் குடித்துவிடும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் படகுகள் மூலம் விளையாடப்படும் சில விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீந்த வேண்டாம் என்ற எச்சரிக்கை பலகை அந்த கடற்கரைகளில் வைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட 7 பிரபலமான கடற்கரைகளில் அதிகாரிகள் நீரின் சுகாதார தன்மையை அடிக்கடி சோதனை செய்வார்கள். அவ்வாறு செய்யும்போது பாசிர் ரிஸ் கடற்கரை, செம்பவாங் பூங்கா கடற்கரையில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
ஈஸ்ட் கோஸ்ட், சாங்கி, பொங்கோல், சிலேத்தார் தீவு கடற்கரை, செந்தோசா ஆகிய கடற்கரை நீரின் தரம் நன்றாக இருப்பதாக வாரியம் தெரிவித்தது.