இன்டர் பசிபிக் பெட்ரோலியம் (ஐபிபி) நிறுவனத்துக்கு ஏற்பட்ட 146 மில்லியன் அமெரிக்க டாலர் (S$196 மில்லியன்) இழப்புக்கு அதன் முன்னாள் இயக்குநர் கோ ஜின் ஹியன்தான் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோ ஜின் ஹியன் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் இயக்குநர் என்கிற முறையில் கோ தமது கடமைகளை முறையான வகையில் நிறைவேற்றவில்லை என்று கூறி அவருக்கு எதிராக ஐபிபி நிறுவனம் வழக்கு தொடுத்தது.
குறிப்பிட்ட சில விவகாரங்களில் 55 வயது கோ கவனம் செலுத்தவில்லை என்றும் அவ்வாறு செய்திருந்தால் நிறுவனம் ஏமாற்றப்படுவது தெரிய வந்திருக்கும் என்றும் ஐபிபி நிறுவனம் தெரிவித்தது.
தாம் கடமை தவறவில்லை என்றும் தம்மால் நிறுவனத்துக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்றும் கோ வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான முழுத் தீர்ப்பு இன்னும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இயக்குநர் என்கிற முறையில் நிறுவனம் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தி அவற்றைக் கண்காணிப்பது கோவின் கடமை என்று நீதிபதி ஐடித் அப்துல்லா தெரிவித்தார்.
கோ தமது கடமையை செவ்வனே செய்திருந்தால் நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்திய பரிவர்த்தனைகளைத் தடுத்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
“நேர்மையாக செயல்படும், நியாயமான அளவுக்கு கடுமையாக உழைக்கும் இயக்குநராக இருந்திருந்தால் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை நடத்தியிருப்பார்,” என்று நீதிபதி ஐடித் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, கோவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது.
நியூ சில்க்ரூட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கோ பதவி வகித்தபோது மோசடிப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தமக்கு எதிரான குற்றச்சாட்டை கோ மறுத்தார்.
அடுத்த வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் மார்ச் மாதம் நடைபெறுகிறது.