சிங்கப்பூர் விமானக் காட்சி 2024ல் விமானப் பிரியர்கள் பலவகை விமான சாகசங்களைக் காண முடியும். விமானக் காட்சியில் இடம்பெறும் ஆறு விமானப் படைகளில், ஐந்து வெளிநாட்டுப் படைகளாகும்.
சாங்கி கண்காட்சி நிலையத்தில் பிப்ரவரி 20 முதல் 25ஆம் தேதி வரை விமானக் காட்சி நடைபெறும்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமானக் காட்சியில் இரு வர்த்தக நிறுவனங்கள் வான் சாகசத்தில் பங்குபெறும்.
அவற்றில் ஒன்று, சீன விமானத் தயாரிப்பு நிறுவனமான கோமேக். அதன் சி-919 ரக விமானம் சிங்கப்பூர் விமானக் காட்சியில் முதல்முறையாக இடம்பெற இருக்கிறது.
மற்றொரு நிறுவனமான ஏர்பஸ், அதன் ஏ350-1000 ரக விமானத்தைக் களமிறக்கவுள்ளது.
இம்முறை நடைபெறும் சிங்கப்பூர் விமானக் காட்சியில் ஆக அதிகமான வெளிநாட்டுப் ஆகாயப் படைகள் இடம்பெறுவதாக ஏற்பாட்டாளர் எக்ஸ்பிரியா தெரிவித்தது.
இங்கு முதல் சிங்கப்பூர் விமானக் காட்சி 2008ல் நடைபெற்றது.
இந்திய ஆகாயப் படையின் சாராங் அணி, இங்கு முதல்முறையாக வான் சாகசம் புரியும்.
அரச ஆஸ்திரேலிய ஆகாயப் படையின் ரூலெட்ஸ், இந்தோனீசிய ஆகாயப் படையின் ஜூபிட்டர், கொரிய குடியரசு ஆகாயப் படையின் பிளேக் ஈகள்ஸ், அமெரிக்க ஆகாயப் படையின் பி-52 ஸ்ட்ராட்டோஃபோர்ட்ரஸ் ஆகிய வெளிநாட்டு ஆகாயப் படைகளும் விமானக் காட்சியில் இடம்பெறுகின்றன.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையும் இதில் பங்குபெறும். எஃப்-15எஸ்ஜி போர் விமானமும் ஏஎச்-64டி அப்பாச்சே ஹெலிகாப்டரும் சாகசங்களை நிகழ்த்தும்.
விமானக் காட்சியின் முதல் நான்கு நாள் அங்கங்களில் வர்த்தக வருகையாளர்கள் மட்டுமே பங்குபெற முடியும். அவற்றுக்கு அடுத்த இரண்டு நாள்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். அதற்கு அவர்கள் நுழைவுச்சீட்டுகளை வாங்க வேண்டும்.
பெரியவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளின் விலை $34.
மூன்று வயது முதல் 12 வயது வரையுடைய சிறார்களுக்கான நுழைவுச்சீட்டுகளின் விலை $17.
விமானக் காட்சியின் வாரயிறுதி நாள்களில் 60,000க்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.