பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிரநோக்கும் வழக்கறிஞர் ரவி மீது மற்றவரை தாக்கியது உள்ளிட்ட மேலும் 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் மீது பிப்ரவரி வியாழக்கிழமை (பிப்ரவரி 29) அன்று பிறருக்கு தொல்லை கொடுத்ததாக ஆறு குற்றச்சாட்டுகளும் தாக்குதல் தொடர்பாக ஐந்து குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் ரவி, 54, மீது ஒருவரிடம் பலவந்தமாக நடந்துகொண்டதுடன் பொது இடத்தில் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் மீது ஆகக் கடைசியாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏழு ஆடவர்கள், இரு மாதர் தொடர்பானது.
இத்துடன் கடந்த 2023ஆம் ஆண்டில் ரவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தற்பொழுது அவர் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகள் என மொத்தம் 19 குற்றச்சாட்டுகள் உள்ளன.
வழக்கறிஞர் ரவி கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி, ஹை ஸ்த்ரீட் செண்டரில் உள்ள கே கே செங் சட்ட நிறுவனத்தில் ரிமோட் கன்ட்ரோல் கருவியை ஒருவர் மீது வீசி எறிந்து அவரது வலக்கர மணிக்கட்டிற்கு காயம் விளைவித்த குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அதே சட்ட நிறுவனத்தில் அந்த நாளில் மற்றொருவரை அவரின் நெஞ்சில் கைவைத்து அவரைத் தள்ளிவிட்டதுடன் அவரது சட்டையைப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மீது வாசனைத் திரவிய பாட்டில் ஒன்றை வீசி எறிந்ததில் அது அந்த நபரின் கால் தாடைப் குதியில் பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவற்றுடன், அதே நபரை அவர் வசைபாடியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திரு ரவி இவ்வாறு சட்ட நிறுவனத்தில் நடந்துகொண்ட காரணங்கள் குறித்தோ, மற்ற சம்பவங்களின் பின்னணி குறித்தோ நீதிமன்ற ஆவணங்கள் விளக்கம் அளிக்கவில்லை.