இவ்வாண்டு இறுதிக்குள் உட்லண்ட்ஸ், புக்கிட் மேரா பகுதிகளில் இரண்டு புதிய ‘சர்விஸ்எஸ்ஜி’ நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
அரசாங்கச் சேவைகளைத் தங்களது வட்டாரங்களிலேயே குடிமக்கள் எளிதாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சேவை நிலையங்கள் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதிய நிலையங்கள் உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரிலும் புக்கிட் மேரா டவுன் சென்ட்ரலிலும் இடம்பெறுகின்றன.
புதிதாகத் திறக்கப்படும் இரண்டு சேவை நிலையங்களைத் தவிர்த்து 2021ஆம் ஆண்டு முதல் ஏழு சேவை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பொதுச் சேவைத் துறைக்கு அமைச்சராக பொறுப்பு வகிக்கும் சான் சுன் சிங் வியாழக்கிழமை (பிப்ரவரி 29) தெரிவித்தார்.
சேவைகள் குறித்து இயோ சூ காங் தொகுதி உறுப்பினர் யிப் ஹொன் வெங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அந்தத் தகவலை அமைச்சர் சான் வெளியிட்டார்.
சேவை நிலையங்கள் 25க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து 600க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய சேம நிதி, வரி தொடர்பான வேலைகள், கடப்பிதழ் புதுப்பித்தல் போன்ற சேவைகளை நிலையங்களில் பொதுமக்கள் பெறமுடியும்.
சேவைக்கான தேவைகள் அதிகரிக்கும் போது அந்தந்த வட்டாரங்களில் சேவை நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்படும் என்றும் மூத்தோருக்கு மின்னிலக்க பரிவர்த்தனைகள் செய்ய சேவை நிலையங்கள் உதவும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
சேவை நிலையங்களில் பன்மொழி தெரிந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஒன் பொங்கோல், ‘அவர் தெம்பனிஸ் ஹப்’, புக்கிட் கேன்பரா, தி ஃபிரன்டியர் சமூக மன்றம், கியட் ஹாங் சமூக மன்றம், நீ சூன் சென்டரல் சமூக மன்றம், கம்போங் சாய் சீ சமூக மன்றங்களில் ‘சர்விஸ்எஸ்ஜி’ நிலையங்கள் உள்ளன.