வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் தம்பதியருக்கு மாதாந்திர இல்லப் பராமரிப்பு மானியத்தைத் தவிர, அரசாங்க அமைப்புகளிடமிருந்து வேறு நிதி உதவி கிடைக்கவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
திரு லியோங் குறிப்பிட்ட ஆடவருக்கு 60 வயது. அவர் கண் பார்வையற்றவர்.
அந்த ஆடவரின் மனைவிக்கு 55 வயது. கீழே விழுந்ததில் கணுக்கால் முறிந்து நடமாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தத் தம்பதியருக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்று பிப்ரவரி 12ஆம் தேதியன்று திரு லியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது உண்மையன்று என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமது பதிவுக்குத் திரு லியோங் திருத்தம் போட வேண்டும் என்று பொஃப்மா சட்டத்தின்கீழ் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, திரு லியோங்கிடம் பேசுவதற்கு முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங்குடன் தொடர்புகொள்ள முயன்றதாகவும் ஆனால் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட தம்பதியர் கூறினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திரு சிங், அந்தக் கடிதம் தம்மிடம் அனுப்பிவைக்கப்பட்டபோது அந்தத் தம்பதியரின் முகவரி அதில் குறிப்பிடப்பவில்லை என்று தெரிவித்தார்.
அண்மையில் அந்தக் கடிதம் தமது கண்ணில் பட்டபோது அந்தத் தம்பதியரின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்ததாகவும் அவர்களுடன் தொடர்புகொண்டதாகவும் திரு சிங் கூறினார்.
அவர்களது முகவரி தெரியவந்ததும் வெஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் திரு லியோங்கிடம் அந்தத் தம்பதியர் குறித்து தெரிவித்ததாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிடம் சமூக நிதி இருப்பதால் அந்தத் தம்பதியருக்குத் தேவைப்பட்டால் அக்கட்சியின் தொண்டூழியர்களால் அவர்களுக்கு உடனடியாக உதவ முடியுமா என்று அவர்கள் பரிசீலிக்க அவ்வாறு செய்ததாகத் திரு சிங் தெரிவித்தார்.
தமக்குப் பலதரப்பினரிடமிருந்து உதவி கேட்டு கடிதங்கள் கிடைப்பதாகவும் அவர்களுக்குத் தம்மால் முடிந்த உதவியைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.